ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை..

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 11:28 AM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரசில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறினர். அவர்களை பாஜகவினர் அழைத்துச் சென்று, பாஜக ஆளும் கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். அந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் எழுதி, பாஜகவினரிடம் கொடுத்தனர். அந்த ராஜினாமா கடிதங்களை ம.பி. பாஜக தலைவர்கள் வாங்கிச் சென்று சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர்.

அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரை முதலமைச்சர் கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். இதையடுத்து, அந்த 6 பேரின் ராஜினாமாக்களை மட்டும் ஏற்று, அவர்களின் எம்.எல்.ஏ. பதவியையும் சபாநாயகர் பிரஜாபதி பறித்தார்.
அதே சமயம், மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பினார். நீங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்தீர்களா என்பதை நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் இருந்து திரும்பவில்லை.

இந்த சூழலில், கமல்நாத் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக பாஜக புகார் அளித்தது. இதனால், கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சட்டசபையில் கவர்னர் உரை முடிந்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சபையைச் சபாநாயகர் ஒத்தி வைத்தார். கொரோனா வைரஸ் நோயைக் காரணம் காட்டி வரும் 26ம் தேதிக்குச் சட்டசபையை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து, கமல்நாத் அரசு உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், சபாநாயகர் சட்டசபையை 26ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதால், பெரிய அளவில் குதிரைப் பேரம் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மனு, நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி, சபாநாயகரை முடிவெடுக்க நிர்ப்பந்திக்க முடியாது என்று வாதாடினார். மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி, அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரையும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்துவதாக கூறினார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. அதேசமயம், நாங்கள் குதிரைப்பேரம் நடப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இதற்கு காங்கிரஸ் வழக்கறிஞர் சிங்வி, ஏற்கனவே குதிரைகள் சிறைபிடிக்கப்பட்டு விட்டன என்றார்.

இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் ராஜினாமா மீது சபாநாயகர் எப்போது முடிவெடுப்பார் என்பதைக் கேட்டு இன்று(மார்ச்19) நீதிமன்றத்திற்கு தகவல் தருமாறு காங்கிரஸ் வழக்கறிஞர் தவே, அபிஷேக் சிங்வி ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று காலை 11 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

You'r reading ம.பி. நம்பிக்கை வாக்கெடுப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை