நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை..

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 16:07 PM IST

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கொன்ற 4 பேருக்கு நாளை அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.



டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு துணை மருத்துவம் படித்து கொண்டிருந்த இளம் பெண்ணை ஓடும் பஸ்சில் 6 பேர் பலாத்காரம் செய்து தூக்கி வீசிவிட்டுச் சென்றனர். அந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். போலீசார் புலன் விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான்.

அந்த பெண்ணின் அடையாளம் மறைக்கப்பட்டு, நிர்பயா என்று பெயரிடப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சா்மா, அக்சய்குமார், பவன் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன.

இதைத் தொடர்ந்து, தூக்கு தண்டனை குற்றவாளிகள் தொடர்ந்து பல்வேறு மனுக்களை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக, குற்றவாளி பவன்குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று(மார்ச்19) தள்ளுபடி செய்தது. அதே போல், பவன்குப்தா, அக்சய்குமார் தாக்கல் செய்த 2வது கருணை மனுக்களையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இதையடுத்து, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அக்சய்குமார் ஆகியோர் நாளை(மார்ச் 20) காலை 5.30 மணிக்குத் தூக்கிலிடப்படுகிறார்கள். இதற்கான உத்தரவை விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

You'r reading நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை