நாகர் கட்டடக் கலை.. ரூ. 300 கோடி.. பிரமாண்ட அயோத்தி ராம் மந்திர் எப்படி உருவாகிறது?!

Nagar Architecture 300 crore ..

by Sasitharan, Aug 5, 2020, 12:25 PM IST

இந்துக்களின் பல நூறு கால கோரிக்கை இன்னும் சற்று நேரத்தில் நிறைவேறவுள்ளது. உத்தப்பிரதேசத்தின் பழம்பெரும் பூமியான ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட இருக்கிறார். இதற்காக அயோத்தி விழாகோலம் பூண்டு, மின் ஒளியில் ஜொலிக்கின்ற அதே வேளையில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திலும் உள்ளது.

பூமி பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு கொடுப்பதற்காக 1.25 லட்சம் `ரகுபதி லட்டுகள்' தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளன. சுமார் 50 ஆயிரம் லட்டுகள் சீதையின் ஜன்ம பூமியான பீகாரின் `சீதாமர்கி' ஆலயத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இன்னும் சில கோவில்களுக்கும் அனுப்பப்பட உள்ளன. சரியாக இன்று பிற்பகல் 12.44.08 முதல் 12.44.40க்குள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. விழாவுக்காக நல்ல முகூர்த்தமாக 32 நொடிகள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது.

ராம் மந்திரில் என்னென்ன வசதிகள்?!

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய கோவில் என்றால், கம்போடியா நாட்டின் அங்கூர்வாட்டில் உள்ள விஷ்ணு கோவில்தான். இக்கோயில் சுமார் 401 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. இதற்கடுத்து உலகின் இரண்டாவது பெரிய கோவிலாக நம் திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தற்போது கட்டப்படவுள்ள ராமர் கோவில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது.

ராம் மந்திரின் நீளம் மட்டுமே 300 அடியாகவும், அகலம் 280 அடியாகவும், உயரம் 161 அடியாகவும் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் கோவில் மூன்று தளங்களை கொண்டும், ஒவ்வொரு தளத்திலும்106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் அமைக்கப்பட இருக்கின்றன. பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த தூண்கள் அனைத்தும் இதற்காக பயன்படுத்த இருக்கின்றன.

புகழ்பெற்ற நாகர் கட்டடக் கலை வடிவில் கோவில் அமையவிருக்கிறது. ராமரின் மூல ஸ்தானத்துக்கு வலப்புறம் லக்ஷ்மணன் ஆலயமும், இடப்புறம் சீதா தேவி ஆலயமும், முன்புறம் அனுமன் ஆலயம் மற்றும் கணபதி ஆலயமும் அமையவிருக்கின்றன. கோவிலுக்கு பின்புறம் 20 ஏக்கர் பரப்பளவில் பக்தர்கள் தியானம் செய்ய தியான மண்டபம், இலக்கிய நூலகம், உணவு அறை எனப் பல்வேறு வசதிகள் செய்யப்பட இருக்கின்றன.

கோயில் கட்டுமானத்துக்காக ரூ.300 கோடியும், மற்ற வசதிகளை உருவாக்க ரூ.1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன. அயோத்திக்கு என தனி விமான நிலையம், சாலை வசதி விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

You'r reading நாகர் கட்டடக் கலை.. ரூ. 300 கோடி.. பிரமாண்ட அயோத்தி ராம் மந்திர் எப்படி உருவாகிறது?! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை