பாஜகவுடன் ரகசிய கூட்டு.. காங்கிரஸ் தலைவர்கள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு.. செயற்குழுவில் காரசாரம்..

Rahul Gandhi condemns the timing of the leaders letter.

by எஸ். எம். கணபதி, Aug 24, 2020, 14:34 PM IST

கபில்சிபல், குலாம் நபி உள்ளிட்ட தலைவர்கள், பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகக் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு கபில்சிபல் காட்டமாகப் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அதன்பின், இடைக்காலத் தலைவராகச் சோனியா காந்தி இருந்து வருகிறார். ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவரே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அதுவே கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் சில தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், தலைவர் பதவியே வேண்டாம் என்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அறிவித்து விட்டனர்.

இந்த சூழ்நிலையில், கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 27 தலைவர்கள் இணைந்து சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இதில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விமர்சிப்பது போல் சாராம்சம் இருந்ததால், மூத்த தலைவர்கள் பலரும் அதற்குக் கடுமையாகப் பதிலளித்து ஒரு பதில் கடிதம் அனுப்பினர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், இன்று(ஆக.24) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். இதையடுத்து, சோனியாவின் அறிக்கையை பொதுச் செயலாளர் வேணுகோபால் வாசித்தார். அதில், இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகளைக் கட்சியின் செயற்குழு தொடங்க வேண்டும் என்றும் சோனியா கூறியிருந்தார்.

இதையடுத்து, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டுமென்றனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசுகையில், மூத்த தலைவர்களின் கடிதம் என் மனதை நோகடித்து விட்டது. கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, ராகுல்காந்தி பேசும் போது, மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்சனையை எழுப்பியது ஏன்? சோனியா காந்தி, மருத்துவமனையில் இருந்த போது கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை பொது வெளியில் மீடியாவிடம் சொன்னது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசைப் பலவீனப்படுத்துகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, குலாம் நபி ஆசாத் பேசுகையில், கட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று கூறி விட்டு, சோனியா காந்தியின் தலைமையை ஆஹா, ஓஹோவென புகழ்ந்தார். சோனியாவின் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.
உடனே, குலாம் நபி ஆசாத்திடம் பிரியங்கா காந்தி பேசும் போது, நீங்கள் கடிதத்தில் எழுதியிருப்பது வேறு, இப்போது இங்கே பேசுவது வேறாக இருக்கிறது. கடிதத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு அப்படியே முரணாக இங்கு ஏன் பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் பங்கேற்காத கபில்சிபல் , கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவை ஆதரித்து நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மணிப்பூரில் பாஜக அரசை வீழ்த்துவதற்கு நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற ஐகோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனாலும், நான் பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளதாகச் சொல்வதா? என்று டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிரங்கமாக வெளியிட்டார்.

You'r reading பாஜகவுடன் ரகசிய கூட்டு.. காங்கிரஸ் தலைவர்கள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு.. செயற்குழுவில் காரசாரம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை