பாஜக தவற விட்ட புதிய இந்தியாவிற்கான பாதை

The path to a new India that the BJP has missed

பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல்.சீராக ஒரு ஸ்திரத்தன்மையோடு இந்தியப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்த போது பாஜக அரசு முன்னெடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முதல் ஆட்டம் கண்டது நம் பொருளாதாரம். அதன் பின்பு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்தநிலை இந்தியாவிலும் அதன் தாக்கத்தை இரண்டு மடங்காக அதிகரித்தது. இது ஒரே நேரத்தில் கஜா புயலும், ஒக்கி புயலும் தாக்கியதற்குச் சமம் எனக் கொள்ளலாம்.

இந்தியா ஒரு சோசியலிச நாடு என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருப்பது உண்மையெனில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தேசத் துரோக செயல் என்றே கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் சோசலியச கட்டமைப்பின் பின் கட்டி எழுப்பப்பட்ட இந்த தேசத்தின் முக்கிய பங்கு வகிப்பவர்கள் சிறு குறு வணிகம் செய்பவர்களே. அவர்களை ஒட்டுமொத்தமாக உருக்குலைத்த இந்த அரசின் நடவடிக்கை, இந்திய நாடு முதலாளித்துவ நாடு என்பதை உரக்கச் சொல்கிறது. டிஜிட்டல் இந்தியா, கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாத செயல்களுக்கான முதலீடு ஒழித்தல் என மதிப்பிழப்பு நடவடிக்கையின் எந்த ஒரு பலனும் முழுமையாக எட்டப்படவில்லை. அத்தனையும் விழலுக்கு இரைத்த நீர் என்றே இப்போது கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

ஸ்விஸ் கணக்கில் இருந்து கறுப்புப் பணம் மீட்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருந்தது. அது அங்கேயே தான் இருக்கிறது. செயலாக்கத்திற்கு வரவில்லை. அதன்பின்பு பெரிய வணிகத்தைப் பொறுத்தமட்டில் மோனோபோலிசத்தை மறைமுகமாக ஆதரித்தது மத்திய அரசு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அதானி குழுமம் வளர்ந்த விதத்தையும், மற்ற பெரு வணிக நிறுவனங்கள் வளர்ந்த விகிதத்தையும் பார்த்தாலே இது புரியும்.கடந்த 10 வருடங்களில் தீவிரவாத நடவடிக்கைகள் வெகுவாக குறைந்து இருப்பது பாராட்டுதலுக்குரியது. ஆனால் வெளியுறவுக் கொள்கைகள் நேர்மாறாக சரிந்து உள்ளது என்பது உண்மை.சீனாவின் ஆக்கிரமிப்புகளுக்குச் சீன செயலிகளைத் தடை செய்வது பொருத்தமற்ற பதிலடி. பாகிஸ்தானை நேர்கொண்ட விதத்திற்கும் சீனாவை நேர் கொள்ளும் விதத்திற்கும் இடையில் இந்தியத் தேசத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆனால் ராணுவத்திற்குச் செலவழிக்கும் தொகையில் பாதி கூட தேசத்தின் மருத்துவம் மற்றும் கல்வி கட்டமைப்புகளுக்குச் செலவிடவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாளை வரப்போகும் போருக்கு இன்று மக்களிடம் வரி எனும் பெயரில் மிகப்பெரிய சுரண்டல் நடக்கிறது.ரஃபேல் விமான கொள்முதலில் Technology Transfer எனும் யுக்தியைக் கையாண்டு France அரசுடன் சேர்ந்து ரபேல் விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு எடுத்து வந்தது பாராட்டத்தக்கச் செயல். ஆனால் அப்படி ஒரு Technology Transfer போன்ற விடயங்கள் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நடக்காது போனது, இன்று பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காவு வாங்குகிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்க Foreign Direct Investments-களை பெருக்கி பெருநிறுவனங்களுக்குக் களமாட வழிவகை செய்து இருத்தல் வேண்டும். ஆனால் அமெரிக்க - இந்திய உறவு என்பது பக்கத்து வீட்டுக்காரன் போலப் பெயரளவில் மட்டுமே உள்ளது. அதற்குக் கோடிகளில் செலவழித்து விழாக்களை நடத்தியது மட்டுமே மிச்சம்.சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, மஹாராஷ்ட்ராவில் சிவாஜி சிலை, உத்தரப்பிரதேசத்தில் ராமர் சிலை என இந்த சிலைகளின் பட்ஜெட்டையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை, அரசு சார்பாக நிறுவி அதில் உலகத் தரமான ஒரு நூலகத்தை அமைத்து இருந்து இருக்கலாம். வரலாற்றில் பெருமை கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அறிவார்ந்த இளைய சமுதாயத்தை வளர்த்தெடுப்பது அவசியம்.

பாஜக என்ன செய்து இருக்கலாம்.

1. FDI எனும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து அவசரக் கால நடவடிக்கையாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கி இருக்க வேண்டும்.

2. Start Up India எனும் திட்டத்தை வகுத்த இந்தியா அதே நேரத்தில் GST வரிவிதிப்பில் Start up நிறுவனங்களுக்குச் சலுகை அளித்திருத்தல் வேண்டும்.

3. முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் வழிகாட்டுதலில் MSME Sector களை வளர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது. அவரின் மேலான ஆலோசனைகளைப் பணமதிப்பிழப்பின் முந்தைய இரு வருடங்களில் கேட்டிருந்தால், இன்று பொருளாதாரம் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. RBI க்கும் Finance Ministry க்கும் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் வேறு.

4. மருத்துவ மற்றும் கல்வி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைச் சரிவர உணர்ந்து கொள்ளாத தன்மையை மாற்றி, பட்ஜெட் வடிவமைப்பை மாற்றி அமைத்திருத்தல் வேண்டும்.

5. IIT மற்றும் AIIMS போன்ற அரசு நிறுவனங்களை ஸ்திரப்படுத்த தவறியதும், IIT களில் அரசியலை நுழைய விட்டு அதன் தரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள நிலையை மாற்றி இருக்க வேண்டும்.

6. அரசு கொள்கைகள் பெரும்பாலும் Racial ஆக இருந்தது வருத்தத்துக்குரியது. Rational ஆக யோசிக்கும் அரசு தான் இப்போதைய தேவை.

7. சரிவிற்கு உள்ளாகும் துறைகளை முன்னரே உணர்ந்து அவற்றிற்கு அரசினால் முடிந்த அளவு உதவிகளைக் கொடுக்க தவறியது மிகப்பெரிய காரணம். இன்றைய Privatisation க்கு அரசின் Prediction based governance இல்லாது போனது மிகப்பெரிய காரணம்.

இது போலப் பல செயல்களை முன்னரே செய்து இருந்தால் இந்தியத் தேசம் வளர்ச்சியை நோக்கி ஓட முன்வந்து இருக்கும். முழு பூசணிக்காயை சோற்றிற்குள் மறைத்து வைத்துவிட்டு, Statisics களின் ஏற்ற இறக்கத்தை வைத்து மீடியாக்களை ஏமாற்றுவது போல அல்ல மக்களை ஏமாற்ற முயல்வது.

அரசாங்கங்கள் வரும் போகும். கட்சிகள் புதிதாக முளைக்கும் வீழும்.தேசமும் அதன் மக்களும் தான் நிலைத்து இருப்பார்கள் என முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியது போல நிலைத்து இருக்கும் தேசமும், நிலைத்து இருக்கும் மக்களும் மத்திய அரசைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

You'r reading பாஜக தவற விட்ட புதிய இந்தியாவிற்கான பாதை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை