பஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...!

Three out of Pancharathnam gets married today

by Nishanth, Oct 24, 2020, 15:54 PM IST

திருவனந்தபுரம் அருகே ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளில் 3 பெண்களின் திருமணம் இன்று குருவாயூர் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தை 3 பேரின் சகோதரன், தந்தை ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைத்தார்.

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ரமாதேவி. இவர்களுக்கு கடந்த 1995 நவம்பர் 18ம் தேதி ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன. இதில் நான்கும் பெண் குழந்தைகள் தான். ஒரேயொரு ஆண் குழந்தை. அன்று உத்திரம் நட்சத்திரம் என்பதால் 5 பேருக்கும் உத்ரஜா, உத்ரா, உத்தரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

குழந்தைகளுக்கு 9 வயது இருக்கும்போது அவர்களது வாழ்க்கையில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது. பிரேம்குமார் அப்பகுதியில் ஒரு சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். அதில் குறைந்த வருமானம் தான் அவருக்குக் கிடைத்து வந்தது. இதனால் 5 குழந்தைகளையும் வளர்ப்பதற்கு அவர் பெரிதும் சிரமப்பட்டு வந்தார். குடும்பத்தை நடத்தப் பல இடங்களில் அவர் கடன் வாங்கினார். நாளுக்கு நாள் கடன் வாங்கிய தொகை அதிகரித்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதையடுத்து பிரேம்குமார் கடன்சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்த பின்னர் தனது 5 குழந்தைகளையும் ரமாதேவி மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்தார். இந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து, போத்தன்கோட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரமாதேவிக்கு அப்போதைய கேரள அரசு வேலை வழங்கியது.

இந்நிலையில் 4 பெண் குழந்தைகளின் திருமணத்தைக் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஒரே நாளில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் திருமணத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்துஇன்று குருவாயூர் கோவிலில் வைத்து இவர்களின் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. உத்ரஜாவுக்கு பத்தனம்திட்டாவை சேர்ந்த ஆகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர் குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரால் ஊருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து உத்ரா, உத்தரா, உத்தமா ஆகிய 3 பேரின் திருமணம் குருவாயூர் கோவிலில் வைத்து இன்று காலை நடந்தது. இவர்களது ஒரேயொரு சகோதரனான உத்ரஜன் தந்தை ஸ்தானத்தில் இருந்து தன்னுடைய 3 சகோதரிகளின் திருமணத்தை நடத்தி வைத்தார். பஞ்சரத்தினங்கள் என அழைக்கப்படும் இந்த 5 பேரின் பிறப்பு முதல் கேரள மீடியாக்கள் கொண்டாடி வருகின்றன. இன்று நடைபெற்ற இவர்கள் 3 பேரின் திருமணத்தையும் அனைத்து மலையாள டிவிகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You'r reading பஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை