காதலனை மணப்பதற்காக விளம்பரப் பலகையின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சிறுமி

by Nishanth, Nov 9, 2020, 20:31 PM IST

காதலனை மணப்பதற்காக 40 அடி உயர விளம்பர பலகையின் உச்சியில் ஏறி சிறுமி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது. இறுதியில் காதலனுடன் சிறுமியை போனில் பேச வைத்து போலீசார் அவரை கீழே இறங்க வைத்தனர். 45 வருடங்களுக்கு முன் 1975 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ஷோலே படத்தை இன்னும் யாராலும் மறந்திருக்க முடியாது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி மற்றும் சஞ்சீவ் குமார் உள்பட ஜாம்பவான்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியா முழுவதும் பரபரப்பாக ஓடியது. அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் வீரு என்ற கேரக்டரில் தர்மேந்திரா நடித்திருப்பார். வாசந்தி என்ற கேரக்டரில் ஹேமாமாலினி நடித்திருப்பார். தன்னுடைய காதலியான ஹேமாமாலினியை மணக்க அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்.

இதையடுத்து தர்மேந்திரா ஒரு வாட்டர் டேங்கின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பார். பாசந்தியை திருமணம் செய்து வைத்தால் தான் கீழே இறங்குவேன் என்றும், இல்லாவிட்டால் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் மிரட்டல் விடுப்பார். இதையடுத்து நாயகியின் தாய் வேறுவழியின்றி திருமணத்துக்கு சம்மதிப்பார். அதன்பிறகு தான் தர்மேந்திரா வாட்டர் டேங்கின் உச்சியில் இருந்து கீழே இறங்கி வருவார். இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள பர்தேசிபுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலுக்கு அந்த சிறுமியின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தன்னுடைய தாயை வழிக்கு கொண்டுவர ஷோலே பட பாணியை பின்பற்ற அந்த சிறுமி தீர்மானித்தார்.

இதையடுத்து நேற்றிரவு அங்கு உள்ள ஒரு சாலையில் வைக்கப்பட்டிருந்த 40 அடி உயர விளம்பர பலகையின் உச்சியில் ஏறினார். அங்கிருந்தபடியே தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து வைக்காவிட்டால் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சிறுமியை கீழே இறக்க எவ்வளவோ முயற்சித்தும் போலீசாரால் முடியவில்லை. இதையடுத்து அந்த சிறுமியின் காதலனை தொடர்பு கொண்ட போலீசார் அவரிடம் விவரத்தைக் கூறினர். இறுதியில் காதலன் அந்த சிறுமியிடம் போன் செய்து தாயிடம் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதன் பிறகே அந்த சிறுமி கீழே இறங்கி வந்தார். விளம்பரப் பலகையின் உச்சியிலிருந்து காதலனுக்காக போராடும் அந்த சிறுமியின் வீடியோவும், போட்டோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

You'r reading காதலனை மணப்பதற்காக விளம்பரப் பலகையின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சிறுமி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை