தங்க கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்...

by Nishanth, Nov 12, 2020, 18:57 PM IST

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.திருவனந்தபுரம் ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னாவுடன் தொடர்பு வைத்திருந்த கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறையினர் கடந்த இரு வாரங்களுக்கு முன் கைது செய்தனர்.

கடந்த இரு வாரங்களாக அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. முதலில் விசாரணைக்கு சிவசங்கர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. ஆனால் அவருக்கு எதிராகக் கிடைத்த முக்கிய ஆவணங்களைக் காண்பித்த போது வேறுவழியின்றி அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தார். சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில் தங்கக் கடத்தல் உள்பட சில மோசடிகளில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தில் பணிபுரியும் சில முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளர் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை.இந்நிலையில் சிவசங்கரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவரை இன்று எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே இன்று சிவசங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், தங்கக் கடத்தல் உள்பட சில மோசடிகளில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா ஒரு முகமூடியாக மட்டுமே இருந்து வந்துள்ளார்.

அந்த முகமூடிக்குப் பின்னால் இருந்து கொண்டு சிவசங்கர் தான் தன்னுடைய திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளார். தங்கக் கடத்தல் உள்பட மோசடிகளில் சிவசங்கருக்கும் முக்கிய பங்கு உண்டு. அவருக்கும் ஏராளமான கமிஷன் தொகை கிடைத்துள்ளது. சிவசங்கருக்கு கேரள அரசில் பெரும் செல்வாக்கு உள்ளது. எனவே அவரை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

சிவசங்கர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சிவசங்கர் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. முதல்வர் அலுவலகத்தைக் குறிவைத்திருப்பதால் தான் அவர் மீது அமலாக்கத் துறை எந்த முகாந்திரமும் இல்லாமல் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சிவசங்கரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 17ம் தேதிக்குத் தள்ளிவைத்தது. மேலும் வரும் 26ம் தேதி வரை சிவசங்கரை நீதிமன்றக் காவலில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

You'r reading தங்க கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்... Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை