விசாரணைக்கு பயந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன முதல்வரின் செயலாளர்

by Nishanth, Nov 26, 2020, 22:46 PM IST

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பயந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் இன்று மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகாவை சேர்ந்த அதிகாரிகள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய அமலாக்கத் துறை சிவசங்கரை கைது செய்து இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தது. ஆனால் சுங்க இலாகா சிவசங்கரிடம் பலமுறை விசாரணை நடத்திய போதிலும் அவரை கைது செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுங்க இலாகாவும் சிவசங்கரை கைது செய்து காவலில் எடுத்துள்ளது. இது தவிர நேற்று இந்த கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார் ஆகியோரையும் சுங்க இலாகா காவலில் எடுத்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே மத்திய அமலாக்கத் துறை சிவசங்கரிடம் விசாரணை நடத்திய போது தங்கக் கடத்தல் தொடர்பான சில முக்கிய விவரங்கள் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் செயலாளர் ரவீந்திரனுக்கும் தெரியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரிக்க மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதன்படி கடந்த 3 வாரங்களுக்கு முன் விசாரணைக்கு ஆஜராக கூறி மத்திய அமலாக்கத் துறை ரவீந்திரனுக்கு நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் விசாரணைக்கு முந்தைய நாள் தனக்கு கொரோனா பாதித்துள்ளதாக கூறி ரவீந்திரன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இதையடுத்து மத்திய அமலாக்கத் துறையால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த வாரம் ரவீந்திரன் வீடு திரும்பினார். இதையடுத்து மீண்டும் அவரை விசாரிக்க மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் 27ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார். விசாரணையை தவிர்ப்பதற்காகவே அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமலாக்கத் துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

You'r reading விசாரணைக்கு பயந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன முதல்வரின் செயலாளர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை