ஐதராபாத்தை பாஜக குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? அசாதீன் ஓவைசி கேள்வி

by எஸ். எம். கணபதி, Nov 29, 2020, 09:25 AM IST

ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் பேசியதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அந்த கட்சியின் துப்பாக்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி மரணம் அடைந்ததை அடுத்து, சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இது ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பாஜகவுக்கு பல மாநில தலைவர்கள் வந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த போது, ஐதரபாத்தை பெயர் மாற்றுவீர்களா? என்று என்னிடம் கேட்டார்கள்.

ஏன் முடியாது? உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும் மாத்தி விட்டோமே! அதே போல் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத்தை பாக்கியா நகர் என்று பெயர் மாற்றம் செய்வோம் என்று பேசினார். இதற்கு, ஐதராபாத்தில் செல்வாக்கு படைத்த மஜ்லிஸ்(ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதீன் ஓவைசி பதிலடி கொடுத்தார். அவர் பிரச்சாரத்தின் போது, இது ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் போல் தெரியவில்லை. ஏதோ மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் போல் தெரிகிறது. பாஜக தலைவர்கள் இப்படி ஓடி வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். இன்னும் டிரம்ப் மட்டும்தான் வர வேண்டும்... பாஜகவினர் வந்தால் எல்லா இடத்தையும் பெயர் மாற்றுவார்களாம். உ.பி.யில் இருந்து இங்கு வந்து பெயரை மாற்றுவோம் என்கிறார். நீங்கள் என்ன ஐதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று கேட்டு கடுமையாக விமர்சித்தார்.

டி.ஆர்.எஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவும், பாஜகவின் இடைத்தேர்தல் வெற்றியால் மிரண்டு போயிருக்கிறார். அவர் பிரச்சாரம் செய்த போது, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வந்து நமக்கு பாடம் எடுக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் தெலங்கானா 13வது இடத்தில் இருந்தது. இப்போது 5வது இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால், உ.பி. 28, 29வது இடத்தில் இருக்கிறது. ஆனால், ஆதித்யநாத் இங்கு வந்து நமது ஆட்சியை விமர்சிக்கிறார். அதே போல், மகாராஷ்டிரா 10வது இடத்தில் இருக்கிறது. அதன் முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் இங்கு வந்து நம்மை விமர்சிக்கிறார். அவர்கள் எப்படியாவது மதவாத அரசியலை நுழைத்து விட பார்க்கிறார்கள். தெலங்கானா அமைதியை கெடுக்க முயற்சிக்கிறார்கள். வருங்காலத்தில் நமது குழந்தைகள் நிம்மதியாக வாழ வேண்டாமா? இதை யோசித்து பாருங்கள் என்று பேசியுள்ளார்.

You'r reading ஐதராபாத்தை பாஜக குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? அசாதீன் ஓவைசி கேள்வி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை