தங்கக் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கேரள முதல்வரின் செயலாளருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

by Nishanth, Dec 4, 2020, 16:31 PM IST

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளருக்கு மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு கேரளாவில் இன்னும் ஓயவில்லை. கடந்த ஜூலை மாதம் கடத்தல் தங்கம் பிடிபட்டது. இதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் அமீரக தூதரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த சரத்குமார் மற்றும் இவர்களது கூட்டாளியான சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் குறித்து முதலில் சுங்க இலாகா தான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர் இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதன் பின்னர் மத்திய அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகளும் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த கும்பல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தூதரக பார்சல் வழியாகப் பெருமளவு தங்கம் மற்றும் பொருட்களைக் கடத்தியதும், அவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட முக்கிய நபர்கள் உதவி செய்ததும் தெரியவந்தது. ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிவசங்கரை முதலில் மத்திய அமலாக்கத் துறையும், பின்னர் சுங்க இலாகாவும் கைது செய்தது. இவர் ஸ்வப்னா கும்பலுக்குத் தங்கக் கடத்தல் உள்பட பல்வேறு முறைகேடுகளுக்கு உதவி செய்தது தெரியவந்தது. மேலும் சில முறைகேடான செயலுக்கு முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளர் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் விசாரணைக்கு ஆஜராகக் கூறி ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது. விசாரணைக்கு ஆஜராக வேண்டிய முந்தைய நாள் அவருக்கு கொரோனா பாதித்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார். இதையடுத்து மீண்டும் அவருக்கு விசாரணைக்கு ஆஜராகக் கூறி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டாவது முறையும் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்தடுத்து இவர் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராக மறுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வரும் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கூறி மூன்றாவது முறையாக ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்த முறையும் ஆஜராகாவிட்டால் ரவீந்திரனைக் கைது செய்ய மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது.

You'r reading தங்கக் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கேரள முதல்வரின் செயலாளருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை