தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டிய இந்து அமைப்பினர் கைது..
தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ்மகால் உள்ளது. முகலாய மன்னர் ஷாஜகானால் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.
தாஜ்மகாலை பார்க்க தினமும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், இந்து ஜக்ரான் மஞ்ச் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 4 பேர், கைகளில் காவிக் கொடியுடன் தாஜ்மகால் வளாகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் காவிக் கொடியை காட்டியபடி செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இது வைரலாக பரவியது.
இதற்கிடையே, அவர்களை தாஜ்மகால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த 4 பேரையும் பிடித்து தாஜ்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கவுரவ் தாக்குர், சோனு பாகல், விகேஷ்குமார், ரிஷிலாவனியா என்ற அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது சட்டம்ஒழுங்கிற்கு ஊறு விளைவித்ததாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
You'r reading தாஜ் மகால் வளாகத்தில் காவிக் கொடி காட்டிய இந்து அமைப்பினர் கைது.. Originally posted on The Subeditor Tamil
More India News