நிர்வாண போட்டோக்களுக்காக முக்கிய ராணுவ விவரங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்த ராஜஸ்தான் ஆசாமி கைது

by Nishanth, Jan 11, 2021, 17:19 PM IST

நிர்வாண புகைப்படங்களுக்காக இந்தியாவின் முக்கிய ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ ஏஜென்ட் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரிடமிருந்து பல ராணுவ ரகசியங்கள் கைப்பற்றப்பட்டன.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜெய்சால்மர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக மாநில உளவுத்துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து உளவுத்துறை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த சத்தியநாராயணன் பாலிவால் என்பவர் தான் ஐஎஸ்ஐ இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இதில் அவர் ஐஎஸ்ஐ இயக்கத்திற்கு இந்திய ராணுவ ரகசியங்களைக் கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சத்தியநாராயணனை உளவுத்துறை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இவர் கடந்த சில வருடங்களாகவே இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்தும், பொக்ரானில் உள்ளத் துப்பாக்கி சுடும் தளம் தொடர்பான விவரங்களையும் ஐஎஸ்ஐ இயக்கத்திற்குக் கைமாறி உள்ளார்.ஐஎஸ் இயக்கத்தின் சார்பில் சில பெண்கள் தன்னுடன் பேசியதாகவும், அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை தனக்கு அனுப்பியதாகவும், அதற்குப் பதிலாகவே ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ இயக்கத்திற்குக் கொடுத்ததாகவும் சத்யநாராயணன் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு போலி பேஸ்புக் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் முக்கிய ராணுவ தகவல்கள் மற்றும் புகைப்படங்களை இவர் அனுப்பி வந்துள்ளார். இவரைக் கைது செய்யும் போது உளவுத்துறை போலீசார் அவரிடம் இருந்து ஒரு செல்போனை கைப்பற்றினர். அந்த செல்போனிலும் முக்கிய ராணுவ விவரங்கள் இருந்ததாக உளவுத்துறை போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You'r reading நிர்வாண போட்டோக்களுக்காக முக்கிய ராணுவ விவரங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்த ராஜஸ்தான் ஆசாமி கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை