2 லட்சம் டிராக்டர்கள், 100 கி.மீ. தொலைவு அணிவகுப்பு டெல்லியில் விவசாயிகள் திட்டம்

by Nishanth, Jan 24, 2021, 12:21 PM IST

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்ததை தொடர்ந்து பேரணிக்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணிவகுப்பில் 2 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொள்ளும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் டெல்லி, ஹரியானா மாநில எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைய போகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் இதை முடிவு கொண்டுவர மத்திய அரசு பல முயற்சிகள் எடுத்தது. இதுவரை விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இவை அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தன. புதிய சட்டங்களை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசும், சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று விவசாயிகள் சங்கத்தினரும் கூறியதால் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த 10வது கட்ட பேச்சு வார்த்தையின் போது மத்திய அரசு ஒரு படி கீழே இறங்கி வந்தது. 18 மாதங்களுக்கு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால் அதையும் விவசாயிகள் சங்கத்தினர் ஏற்கவில்லை. இதற்கிடையே குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் என்று விவசாய சங்கத்தினர் கூறினர்.

முதலில் இதற்கு டெல்லி அரசு அனுமதி அளிக்கவில்லை. டிராக்டர் அணிவகுப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில் இந்த டிராக்டர் அணிவகுப்புக்கு நேற்று டெல்லி போலீஸ் அனுமதி அளித்தது. இதையடுத்து அணிவகுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் விவசாய சங்கத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ராஜ்பத்தில் குடியரசு தின அணி வகுப்பு முடிந்தவுடன் நண்பகல் 12 மணியளவில் டிராக்டர் அணிவகுப்பு தொடங்கும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறியது: அணிவகுப்பில் மொத்தம் 2 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொள்ளும். 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அணிவகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அணிவகுப்பில் டிராக்டர்கள் எந்த சிரமும் இல்லாமல் செல்வதற்கு உதவுவதற்காக 2,500 தன்னார்வத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிராக்டர்களின் பின்னால் இந்த தன்னார்வ தொண்டர்கள் ஜீப்புகளில் அவர்களைப் பின் தொடர்வார்கள். தேவைப்பட்டால் அவர்களில் சிலரும் விவசாயிகளுடன் டிராக்டரில் பயணம் செய்வார்கள். ஒவ்வொரு டிராக்டரிலும் நான்கு அல்லது ஐந்து விவசாயிகள் இருப்பார்கள். அணிவகுப்பு செல்லும் பாதையில் 40 ஆம்புலன்ஸ்களும் தயாராக இருக்கும். சிங்கு, காசிப்பூர் மற்றும் டிக்ரி எல்லையிலிருந்து அணிவகுப்பு தொடங்கும். ஆனால் எந்தெந்த பாதையில் அணிவகுப்பு செல்லும் என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த அணிவகுப்பு ஒரு சரித்திரமாக மாறும். பஞ்சாபிலிருந்து 1 லட்சம் டிராக்டர்கள் டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading 2 லட்சம் டிராக்டர்கள், 100 கி.மீ. தொலைவு அணிவகுப்பு டெல்லியில் விவசாயிகள் திட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை