வேளாண் சட்ட விவகாரம்.. நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

by Sasitharan, Feb 5, 2021, 19:21 PM IST

மத்திய அரசுக்கு அகங்காரம் இருப்பதாக கூறினால், விவசாயிகளுடன் எப்படி 11 முறை பேச்சுவாத்தை நடத்திருக்கும் என்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி. வினய் பி சஹாஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 29-ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பேசினார்கள். இதன்படி, பாஜக எம்.பி. வினய் பி சஹஸ்ரபுத்தே பேசுகையில், விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுவது என மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆனால், விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு அகங்காரத்தை விட வேண்டும் என ஒவ்வொரு உறுப்பினர்களும் கூறுகிறார்கள். மத்திய அரசிற்கு அகங்காரம் இருப்பதாக எப்படி விவசாயிகளுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்திருக்குமா? அல்லது வேளாண் சட்டத்தை நிறுத்தி 18 மாதங்கள் நிறுத்தி வைத்திருப்போமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கூறுகையில், நாங்கள் இந்த அளவு நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்ளும்போது அதே அளவு விவசாயிகள் ஏன் நடக்கவில்லை? என்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் மக்கள் ஜனநாயகத்தை உணர்கிறார்கள். மோடியின் மேஜிக் அல்ல, மோடியின் உழைப்பு. பிரதமர் மோடியின் கடின உழைப்பால்தான், இந்தியா வலிமையாக மாறி வருகிறது. அனைவருக்குமான அரசாக மோடி அரசு இருக்கிறது என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி.ஆனந்த் சர்மா, நாட்டின் பொருளாதாரம் கொரோனா காலத்திற்கு முன்பே மந்தமாகதான் இருந்தது. கொரோனா பாதிப்பிற்கு பின்னர் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமானது. அதிலும் குறிப்பாக, லாக்டவுனில் ஏராளமான மக்கள் வேலையிழந்தார்கள். இந்தச் சூழலுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்றார். இந்தச் சூழலில், விவசாயிகள் நீதிக்காகவும், உரிமைக்காகவும் போராடுகிறார்கள். வேளாண் சட்டங்களில் இந்த அளவுக்குச் சூழல் உருவாகியுள்ளதென்றால் அதற்கு மத்திய அரசுதான் காரணம். இதுவரை விவசாயிகள் போராட்டத்தில் 194 விவசாயிகள் உயிரழந்துள்ளார்கள். கொரோனா பணியின்போது மருத்துவர்களும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில், கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது, செங்கோட்டையில் மதரீதியான கொடி ஏற்றப்பட்டபோது, ஒட்டுமொத்த தேசமே வேதனை அடைந்தது. பாரபட்சமற்ற விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரையில் வேளாண் சட்டங்கள் குறித்துக் குறிப்பிட்டது தேவையற்றது, துரதிர்ஷ்டம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று பேசினார்.

You'r reading வேளாண் சட்ட விவகாரம்.. நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை