புதுச்சேரி: கட்டிடத் திறப்பு விழாவுக்கு கவர்னர் விதித்த தடை

புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார்.இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:நகராட்சியின் கட்டிடத் திறப்பு விழாவிற்கு யாரை அழைக்க வேண்டும் என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா ஏற்பாடும் முறைப்படி திறப்பு விழா நடக்க இருந்த நிலையில் தற்போது கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட்டதாகவும் அதன் திறப்பு விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் எனக் கூறி அதன் திறப்பு விழாவை கவர்னர் கிரண்பேடி தடுத்து நிறுத்தியுள்ளார்.

தற்போது கட்டப்பட்டுள்ள நகராட்சி கட்டிடம் உலக வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதில் மத்திய அரசின் நிதி எங்கு உள்ளது என்பதை மக்களுக்கு கிரண்பேடி தெளிவு படுத்த வேண்டும்.தன்னை விழாவிற்கு அழைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசைக் காரணம் காட்டி திறப்பு விழாவை கிரண்பேடி நிறுத்தியுள்ளார். விழாவில் கலந்து கொள்ளத் துணைநிலை ஆளுநர் விரும்பினால் தாராளமாகக் கலந்து கொள்ளலாம்.மத்திய அரசிற்குச் சம்பந்தம் இல்லாத விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் எனக் கூறுவது தவறானது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கான திட்டத்திற்கு இது போன்று தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறார் என்றார்.

READ MORE ABOUT :