கோவா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
![nehru.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/07/blobid0.jpg)
கோவா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியாவும் சமகால உலகமும் என்ற ஒரு வரலாற்று பாடப் புத்தகம் உள்ளது. முன்னதாக, இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் இருந்தது. அது நீக்கப்பட்டு, இந்துத்துவ செயல்பாட்டாளரான விநாயக் சாவர்க்கரின் படம் இடம்பெற்றுள்ளது. அவரைப் பற்றிய குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது கோவா மாநிலத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆளும் பா.ஜ.க அரசின் இந்த செயல்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், " தற்போது, முன்னாள் பிரதமர் நேருவின் படத்தை நீக்கப்பட்டு இந்துத்துவ செயல்பாட்டாளரான விநாயக் சாவர்க்கரின் படம் இடம்பெற்றுள்ளது. நாளையே மகாத்மா காந்தியின் படத்தினை நீக்கி விட்டு, இந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்று கூட கேள்வி பாஜக எழுப்பும்"
"நாங்கள் கோவா முதலமைச்சரை சந்திக்க இருக்கிறோம், ஆனால் அவரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின்பற்றி நேருவின் புகைப்படத்தை மீண்டும் இடம்பெற செய்யவில்லை என்றால், தெருவில் இறங்கி போராடுவோம்" என கோவா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் 68வது பக்கத்தில் மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத்துடன் நேரு அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனுடன் சேர்த்து மேலும் ஒரு நேருவின் புகைப்படமும், புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.