68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம்- அதிர்ச்சித் தகவல்

நாடு முழுவதும் நாள்தோறும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் தரமற்றதாகவும், கலப்படம் செய்யப்பட்டதாகவும் இருப்பதாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

MIlk

இது குறித்து மோகன் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை.

அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர்.

பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இந்த கலப்பட பொருட்கள் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025–ஆம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்துள்ளதாகவும்” மோகன் சிங் தெரிவித்துள்ளார்.