ரயில் பயணங்களில்: கொரோனா காலத்தில் பயணிக்கும்போது கடைபிடிக்க வேண்டியவை

by SAM ASIR, Nov 11, 2020, 13:19 PM IST

கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு பொது போக்குவரத்துக்கான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவைகள் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. பொது முடக்கம் நீக்கப்பட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மும்பை , சென்னை போன்ற நகரங்களில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ரயிலில் பயணிப்பதை பாதுகாப்பானதாக, செலவு குறைந்ததாக மக்கள் நினைக்கின்றனர். ஆகவே, புறநகர் ரயில் சேவையே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ரயிலில் பயணிக்கும்போது கொரோனா முன்னெச்சரிக்கையான 6 அடி சமூக இடைவெளி என்பது கடைபிடிக்க இயலாத ஒன்று. கூட்டத்தில் அருகருகே நிற்பதால் அல்லது அமர்வதால் தொற்று பாதிக்கும் அபாயம் உண்டு. வேலைக்கு புறநகர் ரயிலில் பயணிக்கும்போது கடைபிடிக்கவேண்டிய ஆலோசனைகள் சில.

பயணத்திற்கு முன்பு:

புறநகர் ரயில்களின் நேர அட்டவணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நெரிசல் அதிகமான நேரம், இல்லாத நேரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு உங்களுக்கு வசதியான நேரத்தில் பயணிக்க அது உதவும்.

பயணச்சீட்டு வழங்கும் இடங்களில் நீண்டவரிசையில் சமூக இடைவெளி இல்லாமல் நிற்பதை தவிர்ப்பதற்கு முடிந்த அளவு இ-டிக்கெட் வாங்க முயற்சி செய்யுங்கள். பயணச்சீட்டு வாங்குவதாக இருந்தாலும் பணமற்ற பரிவர்த்தனைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பயணிக்கும்போது மூன்றடுக்கு முகக்கவசம், சானிடைசர் மற்றும் கிருமிநாசினி கொண்ட துடைக்கும் காகிதங்கள் ஆகியவற்றை மறவாமல் எடுத்துச் செல்லுங்கள். சரியாக மூடப்பட்ட உறைகளில் கூடுதல் எண்ணிக்கையில் முகக்கவசங்களை வைத்திருப்பது நல்லது.

ரயிலுக்குச் செல்லும் முன்பு கைகளை சோப்பு பயன்படுத்தி நன்றாக கழுவிவிட்டு பின்னர் முகக்கவசத்தை அணியவும். முகக்கவசம் அணிந்தபிறகு அதை கைகளால் தொடக்கூடாது. ரயில் நிலைய கைப்பிடிகள் மற்றும் ரயிலில் கம்பிகளை பிடிப்பதால் கிருமி தொற்றக்கூடும். ஆகவே, மறவாமல் கையுறைகளை அணிந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் இறங்கியதும் கையுறையை கழற்றவேண்டும். கையுறை அணிய இயலாதபட்சத்தில், கையால் முகத்தை தொடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரயிலிலிருந்து இறங்கியதும் சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

பயணத்தின்போது:

பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம், கைப்பிடிகள், மின்தூக்கிகளின் பொத்தான்கள், ரயில் நிலைய இருக்கைகள் ஆகியவற்றை தொடுவதை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். அதுபோன்றவற்றை தொட நேரிட்டால் உடனடியாக சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும் அல்லது 60 சதவீதம் ஆல்கஹால் கொண்ட சானிடைசர் பயன்படுத்தி சுத்தப்படுத்தவேண்டும்.

ரயிலில் கூட்டமாக அமராமல் முடிந்த அளவு இடைவெளி விட்டு அமரவேண்டும். ஒருவர் இருந்தால் சில இருக்கைகளை காலியாக விட்டு தள்ளி அமரலாம். ரயில் நிலையங்களில் நிற்பதற்கு, அமர்வதற்கு, வரிசையில் நிற்பதற்கு என்று இடங்கள் குறிக்கப்பட்டிருந்தால் அவற்றை கடைபிடிப்பது அவசியம். ரயில் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்தினால் சோப்பு பயன்படுத்தி 20 விநாடி நேரம் கைகளை கழுவவேண்டும்.

பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றுவிடவேண்டும். மற்ற பயணிகள் தரும் உணவுகளை சாப்பிடவேண்டாம். மற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில் தருவதை தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலையத்தில் உணவு வாங்கினால் பணமில்லாத பரிமாற்ற முறையில் வாங்கவேண்டும். ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் முகக்கவசத்தை அகற்றி சாப்பிடவேண்டாம். அலுவலகம் சென்று சேரும் வரை பொறுமையாக இருந்து சாப்பிடவோ, எதையும் அருந்தவோ செய்யலாம். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

அலுவலகம் சென்ற பிறகு:

ரயிலில் சென்று அலுவலகத்தில் இறங்கியபிறகு கைகளை குறைந்தது 20 நொடி நேரம் சோப்பினால் கழுவ வேண்டும். பயணத்தின்போது அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றி, அகற்றுவதற்கோ அல்லது துவைப்பதற்கோ தனி உறையில் வைக்கவும். அலுவலகத்தில் தேநீர் அருந்துவதற்கு அல்லது மதிய உணவு சாப்பிட உணவு சாலைக்கு கூட்டமாக செல்லவேண்டாம். கூடிய மட்டும் இடைவெளி விட்டு அமரவும் அல்லது தனியாக உணவு சாப்பிடவும்.

சில பயணங்கள் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் நிறைந்தவை. ஆகவே, பயணிக்கும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைக்கொள்ளவும்.

You'r reading ரயில் பயணங்களில்: கொரோனா காலத்தில் பயணிக்கும்போது கடைபிடிக்க வேண்டியவை Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை