ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி வழக்கு: விராட்கோலி, கங்குலி, பிரகாஷ்ராஜ், தமன்னாவுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

by Balaji, Nov 3, 2020, 16:58 PM IST

மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு,முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்தி விளம்பரம் செய்கின்றனர்.மக்களில் பலர் அவர்களைப் பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.பிளே கேம்ஸ் என்ற நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ட்ரீம் லெவல் விளையாட்டில் கிரிக்கெட்டிற்காக விளம்பரம் கொடுப்பவர்களை எதிர் மனுதாரராகச் சேர்த்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? ஐ.பி.ல் கிரிக்கெட் அணிகளில் மாநிலங்களின் பெயரைப் பயன்படுத்துவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். அதனைப் பயன்படுத்தவில்லை எனில் யாரும் இந்த கிரிக்கெட்டை பார்க்க மாட்டார்கள். இது முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு தேவையற்ற பிம்பத்தை உருவாக்குகிறது. தவறாக வழிகாட்டி, மக்கள் பார்க்க வைக்கப்படுகிறார்கள். மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் எனத் தெரிவித்தனர்.தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

You'r reading ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி வழக்கு: விராட்கோலி, கங்குலி, பிரகாஷ்ராஜ், தமன்னாவுக்கு நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

More Madurai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை