மாலத்தீவுக்கு புதிய அதிபர் - இந்தியாவுக்கு நன்மையா ?

by SAM ASIR, Sep 25, 2018, 19:19 PM IST

மாலத்தீவில் நடந்த பொதுத் தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வியடைந்துள்ளார். புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சாலி தேர்வாகியுள்ளார்.

கடந்த 2013 தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா, பழைய அதிபர் முகமது நஸீத், தோல்வியை தழுவக்கூடிய நிலையில் இருந்தபோது, அங்குள்ள உச்சநீதிமன்றம் தேர்தலை செல்லாது என்று அறிவித்தது. யாமீன், கூட்டணி உருவாக்கி இரண்டாவது சுற்றில் வெற்றி பெறும் வரைக்கும் இருமுறை தேர்தல் ஒத்திப்போடப்பட்டது.

இந்தத் தேர்தலின்போது, அதிபரின் மாற்று அணி தலைவர்கள் அநேகர் சிறையில் அல்லது நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தனர். இருந்தபோதும் அதிபர் யாமீன் 41.7 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் சாலி 58.3 சத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவை அப்துல்லா யாமீன் ஏற்றுக்கொள்வரா என்ற ஐயம் இருந்து வந்தநிலையில், "மாலத்தீவு மக்கள் தாங்கள் விரும்பிய முடிவினை எடுத்துள்ளனர். நான் இம்முடிவை ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியதுடன், புதிய அதிபராக தேர்வாகியுள்ள இப்ராஹிம் முகமது சாலியை நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் வாக்குரிமை பெற்ற 2,62,000 பேரில் 90 சதவீதத்தினர் வாக்களித்து புதிய அதிபரை தேர்ந்தெடுத்துள்ளனர். பலர் வாக்களிப்பதற்கு ஐந்து மணி நேரம் கூட காத்திருந்துள்ளனர். 2008ம் ஆண்டு மாலத்தீவுகளில் ஜனநாயக ஆட்சி வந்ததிலிருந்து, இந்தத் தேர்தலில் வெற்றி வாக்கு வித்தியாசம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து 1,200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாலத்தீவுகளில் ஏறக்குறைய 22,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். மாலத்தீவு இந்த பிராந்தியத்தில் முக்கியமான புவியியல் பரப்பாகும். யாமீன் தாம் அதிபராக பதவியேற்ற 2013ம் ஆண்டிலிருந்து சீனாவிலிருந்து அதிக முதலீடுகளை பெற்றுள்ளார். உள்கட்டமைப்பு பணிகளுக்கென லட்சக்கணக்கான டாலர்களை சீனாவிலிருந்து வாங்கியுள்ளார்.

சீனாவுடன் அவர் காட்டிய நெருக்கம் இந்த பிராந்தியத்தில் வலுவான சக்தியாக விளங்கும் இந்தியாவுக்கு நெருடலாகவே இருந்து வந்தது. அருகிலுள்ள இலங்கையில், சீன அரசு நிறுவனம் ஒன்று கால் பதித்து, முக்கியமான துறைமுகம் ஒன்றை இயக்கியும் வருகிறது. இந்த பிராந்தியத்தில் சீனா மேலும் மேலும் காலூன்ற மாலத்தீவும் வழிசெய்து வந்தது.

தற்போது வெற்றி பெற்றுள்ள சாலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சி, தேர்தலின்போது சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அதிபராக தேர்வாகியுள்ள சாலி, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதாக வாக்குக் கொடுத்துள்ளார். மாலத்தீவில் நடந்த தேர்தலில் பதிவாகியுள்ள வெற்றியை "ஜனநாயக சக்திகளின் வெற்றி" என்று இந்தியா வர்ணித்துள்ளதோடு, வெற்றி பெற்றுள்ள சாலிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

You'r reading மாலத்தீவுக்கு புதிய அதிபர் - இந்தியாவுக்கு நன்மையா ? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை