போட்டித் தேர்வுகள் இல்லாமல் வழங்கப்படும் மத்திய அரசின் உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?

How to apply Federal Government Scholarship without Competitive Examinations

by Loganathan, Sep 4, 2020, 15:34 PM IST

இன்ஸ்பயர் திட்டம்

அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். அறிவியல் புத்தாக்க ஆய்வுகளை மேற்கொள்வதால் கிடைக்கும் அளப்பரிய ஆனந்தத்தை மாணவர்களிடையே எடுத்துரைத்து, இளம் வயதிலேயே அவர்களை அறிவியல் ஆய்வுகளின்பால் ஈர்த்து, நம்நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத் துறையிலும் ஆராய்ச்சி அபிவிருத்திப் பணிகளிலும் மனிதவளத்தை அதிகரிப்பது இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இன்ஸ்பயர்

இந்தத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, எந்த ஒரு நிலையிலும், உதவித் தொகை வழங்குவதற்காகப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாது என்பது தான். கல்விமுறையின் அடிப்படியிலேயே திறமையான மாணவர்கள் கண்டறியப்படுவார்கள்.

"இன்ஸ்பயர்' திட்டத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை

(i) திறமையை ஆரம்பத்திலேயே ஈர்க்கும் திட்டம் (SEATS)

(ii) உயர்கல்விக்கு உதவித்தொகை திட்டம் (SHE)

(iii) ஆய்வுப்பணி மேற்கொள்வோருக்கு வேலை உத்தரவாதத் திட்டம் (AORC)

திறமையை ஆரம்பத்திலேயே ஈர்க்கும் திட்டம்

திறமையை ஆரம்பத்திலேயே ஈர்க்கும் திட்டத்தின்படி 10 முதல் 15 வரை வயதுள்ள மாணவர்களில் பத்து லட்சம் பேருக்கு ரூ.5000/= உதவித் தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சுமார் ஐம்பதாயிரம் பேரைத் தெரிவு செய்து, நாடுமுழுவதும் நூற்றுக்கும் அதிகமான இடங்களில், வருடாந்திர கோடைக்கால / குளிர்கால முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் பல்வேறு அறிவியல் துறைகளில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குபவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.

புத்தாக்க முயற்சிகளில் கிடைக்கும் அளவில்லாத ஆனந்தத்தை மாணவர்கள் அனுபவித்து மகிழ்வதற்காக ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு 'இன்ஸ்பயர்' விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதின் மூலம், ஒவொரு மாணவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில், ஒவ்வோர் உயர்நிலைப் பள்ளியிலும் இரண்டு மாணவர்களுக்காவது இந்த விருதுகளை வழங்குவதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பயர் விருதுகள் வழங்கப்படுவதற்கான வழிகாட்டி நெறிகள்

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகளுக்கு வழங்கப்படும்.விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்ய எந்த விதமான தேர்வும் நடத்தப்படாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விருதுக்கான மாணவர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பார்கள் நாடெங்கிலும் உள்ள சுமார் நாலரை லட்சம் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்து லட்சம் மாணவர்களுக்கு ஐந்தாண்டுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்க தமது மாதிரிப்படைப்புகளைத் தயாரிக்கவும் எடுத்துச் செல்லவும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.5000 தரப்படுகிறது.

மாவட்ட, மாநில, தேசிய நிலைகளில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தமது படைப்புகளைக் காட்சிப் படுத்த ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கண்காட்சிகளை நடத்தத் தனியாக நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.சிறந்த படைப்புகளுக்கு / மாதிரிகளுக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படும்.பரிசுத்தொகைகள் நேரிடையாகப் பரிசு பெற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் ஒவ்வொரு மாநில அரசும், தத்தமது மாநிலங்களில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள் (அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள்) பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் தரவேண்டும்.

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் ஒரு மாணவரின் பெயரைத் தலைமை ஆசிரியர் தமது கல்வித்துறை உயர் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.மாநில அளவில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக மாநில அரசுகள் தமக்கு உகந்த முறையைப் பின்பற்றலாம். தேர்வுகளில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களுடைய அறிவியல் காட்சிப் பொருள்களின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்வது விரும்பத்தக்கது.
எந்த அளவுகோலின்படி தெரிவுகள் நடைபெறுகின்றன என்று மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கு அறிவிக்க வேண்டும்.

மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஏற்பாடு செய்யப்படும் அறிவியல் கண்காட்சிகளுக்கான செலவை மத்திய அரசு அறிவியல் - தொழில் நுட்பத்துறையே ஏற்கும். மேலும் கண்காட்சிகளில் சிறப்பான காட்சிப்பொருள்களைத் தெரிவு செய்வதற்கான நடுவர்களாக அறிவியலாளர்களையும் கல்வித்துறை நிபுணர்களையும் நியமிக்கும் பொறுப்பையும் இந்தத் துறையே மேற்கொள்ளும்.
இன்ஸ்பயர் தொழில் பழகுநர் திட்டம் உலக அளவில் பிரசித்தி பெற்ற அறிவியலாளர்கள், மற்றும் அறிவியல் துறைகளில் நோபல் பரிசுகள் பெற்ற அறிஞர்களோடு சரிக்குச் சமமாகப் பழகி அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுதான் இன்ஸ்பயர் தொழில் பழகுநர் திட்டம். அறிவியல் பிரிவில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உரிய இந்தத்திட்டம், வாழ்நாள் முழுவதும் அம்மாணவர்களுக்கு தூண்டு வினையாக இருக்கும்.

உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்

கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயிலுவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ், அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம், வழிகாட்டும் அறிவுறுத்தல் பெறுவதற்காக "கோடைக்கால இணைப்பு" என்ற முறையில் மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். இயற்கை அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் பாடங்களில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பயிலுவதற்கு, 17 முதல் 22 வரை வயதுள்ள, திறமையான மாணவர்களுக்கு ஆண்டுக்கு எண்பதாயிரம் ரூபாய் வீதம், ஆண்டுதோறும் பத்தாயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கென 18 பாடங்களில் ஏதாவது ஒன்று பிஎஸ்ஸி, அல்லது எம்எஸ்ஸி, அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்எஸ்ஸி படிப்பில் முதன்மைப் பாடமாகப் படிக்க வேண்டும். அந்தப் பாடங்களின் விவரம் : (1) இயற்பியல் (2) வேதியியல் (3) கணிதவியல் (4) உயிரியல் (5) புள்ளியியல் (6) நிலவியல் (7) வானியற்பியல் (8)வானியல் (9)மின்னணுவியல் (10)தாவரவியல் (11)விலங்கியல் (12)உயிர்வேதியியல் (13)மானுடவியல் (14)நுண்ணுயிரியியல் (15)புவி-இயற்பியல் (16)புவி-வேதியியல் (17)வளி மண்டல அறிவியல் (18)கடல்சார் அறிவியல்.

உத்தரவாதமான ஆய்வுப் பணிவாய்ப்பு

அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் துறைகளில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் அடித்தளத்தை மேற்கொள்ளவும், திறமையான இளம் ஆய்வாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஆதரவளித்து, இத்துறையில் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கில் 22 முதல் 27 வரை வயதுள்ள இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்தின் ராயல் சங்கத்தினர் வழங்குவது போன்ற இளரத்தத்திட்டம் போல, முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிந்தைய முதுமுனைவர் ஆய்வுப்பட்டப் படிப்பிற்கும் இந்த உதவித்தொகை நீட்டிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இன்ஸ்பயர் திட்டத்தில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியிலும் இவர்களை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் பணியமர்த்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

இன்ஸ்பயர் ஃபெலோஷிப்

அறிவியல் ஆய்வுகளில் திறமையானவர்களை வளர்த்தெடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு மேலும் துணையாகத் தனியார்த் துறையையும் ஈடுபடுத்துவதற்காகவும், அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வோரின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்துவதற்காகவும், இன்ஸ்பயர் ஃபெலோஷிப் வழங்கப்படுகிறது. அடிப்படை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய பாடப்பிரிவுகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்தப்பாடங்களில் முதுநிலைப்பட்டத் தேர்வில் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கும், இன்ஸ்பயர் திட்டத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெறுபவர்களுக்கும் ஃபெலோஷிப் வழங்கப்படும்.

You'r reading போட்டித் தேர்வுகள் இல்லாமல் வழங்கப்படும் மத்திய அரசின் உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது? Originally posted on The Subeditor Tamil

More Education News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை