வந்துவிட்டார் ரோகித் மாயங்கா? விஹாரியா? யார் உள்ளே? யார் வெளியே?

by Nishanth, Dec 31, 2020, 16:19 PM IST

காயத்திலிருந்து குணமான ரோகித் சர்மா 3வது டெஸ்டில் விளையாடத் தயாராகி விட்டார். இதனால் யாரை வெளியேற்றுவது என்ற குழப்பத்தில் இந்திய அணி உள்ளது. வெளியே போவது மாயங்க் அகர்வாலா, அல்லது ஹனுமா விஹாரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் தலா ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் வரலாறு காணாத வகையில் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாகத் தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் வீறுகொண்டு எழுந்து ஆஸ்திரேலியாவை அதே கணக்கில் பழிதீர்த்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்களின் பந்து வீச்சும், பேட்டிங்கும் மிகச்சிறப்பாக இருந்தது. அனைத்து வீரர்களுமே நன்றாக விளையாடினர். 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 7 முதல் 11 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராகிவிட்டார். ஆனால் இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்குவாரா அல்லது மத்திய நிலையில் விளையாடுவாரா என இதுவரை தெரியவில்லை. முதலில் மத்திய நிலையில் ஆடிவந்த ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கடந்த வருடம் நடந்த போட்டியில் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடத் தொடங்கினார். அப்போது அவர் சிறப்பாக விளையாடினார். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் அவரால் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாட முடியுமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் அனுபவம் சற்று குறைவு தான். அவர் ஓப்பனிங்கில் இறங்கினால் மாயங்க் அகர்வால் வெளியேற வேண்டியிருக்கும்.

மத்திய நிலையில் இறங்கினால் ஹனுமா விஹாரி வெளியே செல்ல வேண்டியிருக்கும். சுப்மான் கில் சிறப்பாக ஆடி வருவதால் 3வது டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது. மாயங்க் அகர்வால் கடந்த இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. ரோகித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைத்தால் மாயங்க் அகர்வால் அல்லது ஹனுமா விஹாரி இருவரில் ஒருவர் வெளியேற வேண்டியிருக்கும் என்று தேர்வுக்குழு உறுப்பினர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

ஆனால் முன்னாள் வீரர் திலீப் வெங்சார்க்கர் கூறுகையில், ரோகித் சர்மா உள்ளே வரும்போது மாயங்க் அகர்வால் மற்றும் விஹாரி இருவரையுமே வெளியேற்ற வேண்டும். அதற்குப் பதிலாக கே.எல்.ராகுலை அணியில் சேர்க்க வேண்டும். அவரையும் சுப்மான் கில்லையும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இறக்க வேண்டும். ராகுல் தற்போது நன்றாக விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவுக்கு 4வது அல்லது 5வது வீரராக விளையாட வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறுகிறார். இதனால் ரோகித் சர்மா வரும்போது யாரை நீக்குவது, யாரைச் சேர்ப்பது என்ற குழப்பத்தில் தேர்வுக் குழு உள்ளது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளதால் அடுத்த 2 போட்டிகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You'r reading வந்துவிட்டார் ரோகித் மாயங்கா? விஹாரியா? யார் உள்ளே? யார் வெளியே? Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை