மத்திய அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் திடீர் போட்டி

who will be given central minister post in admk?

by எஸ். எம். கணபதி, May 29, 2019, 22:07 PM IST

மத்திய அமைச்சர் பதவிக்கு கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வில் கடும் போட்டி ஏற்பட்டது. 

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பூஜ்யம்தான் கிடைத்தது. அது மட்டுமல்ல, அதனுடன் கூட்டு சேர்ந்த பா.ம.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வுக்கு மட்டும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக தேனியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியிலும் எதிர்க்கட்சிகள் பலத்த சந்தேகத்தை கிளப்பின. ஏதோ தில்லுமுல்லு செய்துதான் அவர் வெற்றி பெற்றார் என்றன. அதற்கு ஏற்றாற்போல் தேர்தல் முடிவுகள் வரும் முன்பே ரவீந்திரநாத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு குச்சனூர் கோயிலில் கல்வெட்டு வைத்தனர். அதன்பின், கல்வெட்டு வைத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. சிவசேனா, லோக்ஜனசக்தி, அகாலிதளம் கட்சிகளுடன் அ.தி.மு.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி தர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க.வின் ஒரேயொரு எம்.பி.யாக வெற்றி பெற்ற ரவீந்திரநாத்துக்கு யோகம் அடித்தது.

அவர்தான் அமைச்சர் என்று பேசப்பட்டது. அதே போல், தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர்களில் ரவீந்திரநாத் பெயரை குறிப்பிட்டு மத்திய அமைச்சரே என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி தருவதற்கு எடப்பாடி ஆதரவாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. கட்சியில் சீனியர்கள் பலர் இருக்க அவருக்கு எப்படி அமைச்சர் பதவி தரலாம் என்று கேள்வி எழுப்பினர். ராஜ்யசபா உறுப்பினர்களில் உள்ள மூத்தவர்களில் யாருக்காவது அமைச்சர் பதவி தர வேண்டுமென்று குரல் எழுப்பினர்.

தற்போது, அ.தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர்களில் அர்ஜூனன், மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே, அவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படாது. வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சசிகலா புஷ்பா, விஜயகுமார், புதுச்சேரி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளனர். இவர்களில் சீனியர் என்ற அடிப்படையில் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி தரலாம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

அதாவது, வைத்திலிங்கத்திற்கு கொடுத்தால் முக்குலத்தோருக்கு பதவி தந்ததாக இருக்கும். அதனால், டி.டி.வி.தினகரன் பின்னால் சென்றவர்களை இழுக்கலாம். அதே சமயம், ஓ.பி.எஸ். கை ஓங்குவதை தடுத்து, வைத்திலிங்கத்தை வளரச் செய்யலாம். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் பிளான் போட்டனர். எனினும், நவநீதகிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவிக்கு முயற்சித்ததாக கூறப்பட்டது. ஆனால், இறுதியில் வைத்திலிங்கத்திற்குத்தான் அமைச்சர் பதவி தரப்படும் என்று கூறப்பட்டது. அதனால்தான், வைத்திலிங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, தேர்தலில் தோற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மல்லுகட்டுகின்றனர்.

You'r reading மத்திய அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் திடீர் போட்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை