அப்பாடா.., மதுரை எய்ம்ஸ்க்கான பணி தொடங்கியாச்சு..., மத்திய குழுவினர் ஆய்வு

Madurai AIIMS hospital, central team inspects spot:

by Nagaraj, Jun 10, 2019, 12:30 PM IST

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி 5 மாதங்களுக்கு மேலான நிலையில், ஒரு வழியாக அதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. ஜப்பான் நாட்டு நிபுணர்களுடன் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்தினார்.

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனாலும் தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் காலம் தாழ்த்தி வந்தது. தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வலுக்க ஒரு வழியாக மத்திய அரசு சம்மதித்தது.

அதன் பின்னர் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய உள்ள இடம் எது? என்பதில் பெரும் அரசியல் விளையாட்டு நடந்தது.சேலம், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி என தமிழக அமைச்சர்கள் பலரும் தங்கள் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்து விட முயற்சிகள் மேற்கொண்டனர். இதனால் இடம் தேர்வு செய்வதில் காலதாமக மானது.

கடைசியில் கடந்த ஆண்டு ஜூன் 18-ந்தேதி டெல்லியில் இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.

மதுரை அருகே தோப்பூரில் 265 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.1500 கோடி மதிப்பில் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த பிரமாண்ட விழாவில், பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழா முடிந்து 5 மாதங்கள் கழிந்தும், பணிகள் எதுவும் நடைபெறாதது மீண்டும் சர்ச்சையானது.

இதற்கிடையே தகவல் அறியும் சட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மாநில அரசு ஒப்படைக்க வில்லை என்று தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான், மத்திய அரசுத் தரப்பில் முதல் கட்டமாக ஆய்வுப் பணிகளை இன்று தொடங்கி உள்ளனர்.

மதுரை தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும் வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் இன்று ஜப்பான் நாட்டு நிபுணர்கள் குழுவுடன் சஞ்சய் ராய் தலைமையிலான மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்தனர். இதோ, அதோ என இழுத்தடிக்கப்பட்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை, மத்திய அரசு துவக்கியுள்ளது தென் மாவட்ட மக்களுக்கு ஓரளவு திருப்தியமையச் செய்துள்ளது.

You'r reading அப்பாடா.., மதுரை எய்ம்ஸ்க்கான பணி தொடங்கியாச்சு..., மத்திய குழுவினர் ஆய்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை