ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

Rs.563 crore sanctioned for Mamallapuram Tourism Development Project

Jan 7, 2020, 09:02 AM IST

ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Governer

தி.மு.க ,அ.மு.ம.க வெளிநடப்பு:

தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு, டி.டி.வி.தினகரன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையை வாசித்தார். அதில் கூறப்பட்டதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள்:


தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட பொது விநியோக அமைப்பு நடைமுறைகளினால், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழ்நாடு அரசால் நடைமுறைப் படுத்த முடிகிறது.பல்வேறு தடைகள் வந்தபோதிலும், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல்கள் நடத்தப்படும்.

மாமல்லபுரம் சுற்றுலா:

மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்ய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். அதன்படி, ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான அனுமதியை விரைவாக வழங்கிட மத்திய அரசினை வலியுறுத்துகிறேன். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

நதிகள் இணைப்பு:

தமிழ்நாட்டிற்குள் பாய்கின்ற நதிகளை இணைக்கும் முதல் கட்டமாக காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டம் தலைவாசலில், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டுவார். மூக்கையூர் மற்றும் குந்துக்கல்லில் முறையே ரூ.120 கோடி மற்றும் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணி விரைவில் நிறைவடையும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள்:


மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறைந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை, 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அதிகரித்து தந்துள்ளன என்ற பரவலான கருத்து உள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மொத்த நிதியளவு குறைந்துள்ளது என்பதே உண்மை நிலவரமாகும்.மேலும், 14-வது நிதிக்குழு பரிந்துரைத்த, மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வு வழிமுறை தமிழ்நாட்டிற்கு மேலும் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாடு மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. இந்த அரசு, நிதிக்குழு முன்பு தனது கருத்துகளை விளக்கமாக சமர்ப்பித்துள்ள நிலையில், மாநில அரசுகளின் செயல்திறனையும், செயல்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில், நியாயமான மற்றும் சமமான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

ஜி.எஸ்.டி. இழப்பீடு:

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு, இதுவரை பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) இழப்பீடாக ரூ.7,096 கோடியை பெற்றுள்ளது. மேலும், மத்திய அரசின் மானியமான ரூ.17,957.31 கோடி இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கான நிலுவை தொகைகளை விடுவிப்பதில் நிலவி வரும் சில சிக்கல்களை களைந்து நிலுவை தொகையினை பெற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.2017-2018-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்திய 2017-2018-ம் ஆண்டில், பல்வேறு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரியில், ஒதுக்கீடு செய்யப்படாத தொகையான ரூ.88,344.22 கோடியில் இருந்து 50 சதவீதத்தை, மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி வசூல் அடிப்படையில் வழங்குவதற்கு பதிலாக, மத்திய அரசு தனது தொகுப்பு நிதிக்கு தவறுதலாக எடுத்துச் சென்றுவிட்டது.
மேலும், 14-வது நிதிக் குழுவின் நிதிப்பகிர்வு முறையின்படி, இத்தொகையில் 42 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது.

இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,073 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலுவை தொகையை நமது மாநிலத்திற்கு விரைவாக விடுவிக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இவ்வாறு ஆளுநர் உரையில் கூறப்பட்டிருக்கிறது.

You'r reading ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை