முரசொலி வைத்திருந்தால் திராவிட இயக்க தமிழன்.. ரஜினிக்கு திமுகவின் பதில்

by எஸ். எம். கணபதி, Jan 18, 2020, 15:03 PM IST

முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் என்று ரஜினிக்கு பதில் சொல்லும் வகையில் அந்த பத்திரிகையில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.


துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா ஜனவரி 14ம் தேதி மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா மலரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த், முதல் மலரை பெற்றுக் கொண்டார். விழாவில் ரஜினி பேசும் போது, திமுகவை வம்பிழுக்கும் வகையில் பேசினார். அவர் பேசுகையில், துக்ளக் பத்திரிகையை சோவுக்கு பிறகு குருமூர்த்தி சிறப்பாக நடத்தி வருகிறார். ஒருவர் கையில் முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லி விடலாம். அதே போல், துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லி விடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது என்று குறிப்பிட்டார்.
இது திமுகவினருக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் ரஜினியை திமுகவினர் சரமாரியாக வசைபாடினர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், தனது ட்விட்டர் பக்கத்தில், காலைப் பிடித்து, காரியக்காரர்.. என்றெல்லாம் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இன்றைய(ஜன.18) முரசொலி நாளிதழில் ரஜினி பெயரை குறிப்பிடாமல் அவரது பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு தலையங்கம் எழுதியுள்ளனர், அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பவன் என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கி விட்டவன் என்று பொருள். இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்ப்பவன் என்று பொருள்.
எத்தனை மிக மிக என்றும் போட்டுக் கொள்ளுங்கள் என்று பொருள். மிக மிக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமையில்லை. தனக்கும் யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று பொருள். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன் என பொருள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் என பொருள். தமிழர் நலன் காப்போன் என்று பொருள். தமிழ்நாடு காப்போன் என்று பொருள். வாழ்ந்த இனம், வீழ்ந்ததன் வரலாறும் வீழ்ந்த இனம் மீண்டும் வாழச் சரியான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டவன் என்று பொருள்.
யார் எதிரி, யார் நண்பன் என்பதை உணர்ந்து விட்டவன் என்று பொருள். எதிரிகளோடு எச்சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாதவன் என பொருள், முரசொலி வைத்திருந்தால் ஆண்டான், அடிமைக்கு எதிரானவன் என்று பொருள்.
சாதிச் சதியை எதிர்ப்பவன், மத மாச்சர்யங்களை வெறுத்தவன் என்று பொருள். சாதி பேதம், மத பேதம் பார்க்காதவன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்து விட்ட உடன்பிறப்பு என பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள்.
இவ்வாறு தலையங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.

You'r reading முரசொலி வைத்திருந்தால் திராவிட இயக்க தமிழன்.. ரஜினிக்கு திமுகவின் பதில் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை