ஆர்.எஸ்.பாரதி கைது... திமுக நிர்வாகிகளிடம் நாளை ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..
M.K.Stalin convene party Mp, Mlas meeting tommorow.
திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தலித் மக்கள் குறித்து அவதூறாக அவர் பேசி விட்டார் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, அவர் ஒரு விளக்கம் அளித்தார். தலித் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனத்தால் தான் பேசியதை திரித்து கூறுகிறார்கள் என்றும், அப்படி பேசியதற்கு மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.இதற்கு பிறகு 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது.
இந்நிலையில், திமுகவின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டத்தை நாளை(மே24) காலை 10 மணிக்கு கூட்டியுள்ளார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், நாளை காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். திமுக கட்சி நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்கு போடுவது, கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
You'r reading ஆர்.எஸ்.பாரதி கைது... திமுக நிர்வாகிகளிடம் நாளை ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News