தமிழ்நாட்டில் கொரோனா பலி 1000ஐ தாண்டியது..

corona death crossed 1000 in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Jun 28, 2020, 10:08 AM IST

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. இது வரை 78,335 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறு நாளுடன்(ஜூன்30) முடிகிறது. 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது.


சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால், தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் மட்டுமே சராசரியாக 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்27) ஒரே நாளில் 3713 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2737 பேரையும் சேர்த்து 44094 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னையில் மட்டுமே நேற்று 1939 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 249 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 4911 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 146 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3420 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 98 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1683 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் 217 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 1703 ஆக அதிகரித்தது. திருவண்ணாமலையில் 110 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அம்மாவட்டத்தில் இது வரை 1624 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வேலூரில் நேற்று 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 1011 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களிலும் நேற்று 20, 25 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியிருக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 68 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1025 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

You'r reading தமிழ்நாட்டில் கொரோனா பலி 1000ஐ தாண்டியது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை