தமிழகத்தில் ஒரே நாளில் 61 பேர் கொரோனாவுக்கு பலி.. உயிரிழப்பு 1571 ஆக அதிகரிப்பு

covid19 death in tamilnadu rises 1571.

by எஸ். எம். கணபதி, Jul 7, 2020, 10:21 AM IST

தமிழகத்தில் இது வரை கொரோனா நோய்க்கு 1571 பேர் பலியாகியுள்ளனர். இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் போல் மதுரை உள்படப் பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று(ஜூலை6) இது சற்று குறைந்து, புதிதாக 3827 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேரும் அடக்கம்.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,978 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 3793 பேரையும் சேர்த்து மொத்தம் 66,571 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 61 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 13 லட்சத்து 76,497 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் தினமும் சுமார் 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக இது சற்று குறைந்துள்ளது. நேற்று 1747 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது. இதில் 50 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.செங்கல்பட்டில் நேற்று 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்தம் 6,853 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. திருவள்ளூரில் நேற்று 175 பேருக்கு கொரேனா கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 4983 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 182 பேருக்குக் கண்டறியப்பட்ட நிலையில், அங்குப் பாதிப்பு எண்ணிக்கை 2729 ஆக அதிகரித்திருக்கிறது. மதுரையில் நேற்று 245 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4338 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரையைத் தாண்டி சுற்றியுள்ள கிராமங்களிலும் கொரோனா பரவியிருக்கிறது. இதையடுத்து, மதுரை மாநகராட்சிக்குள் 16 இடங்களில் நேற்று பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், கிராமங்களிலும் தற்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்து 4வது இடத்திற்கு வந்துள்ளது.

You'r reading தமிழகத்தில் ஒரே நாளில் 61 பேர் கொரோனாவுக்கு பலி.. உயிரிழப்பு 1571 ஆக அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை