தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா சாவுகள்.. இது வரை 2481 பேர் பலி..

corona death rise to 2481 in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Jul 20, 2020, 10:18 AM IST

தமிழகத்தில் கொரோனா நோய்க்கு நேற்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 2481 ஆக அதிகரித்துள்ளது.சீனா வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இந்தியாவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஜூலை19) 4979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 77 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 70,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5160 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 17,915 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று மட்டுமே 78 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 2481 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1254 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 85,859 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 306 பேருக்கும், காஞ்சிபுரம் 220, மதுரை 206, திருவள்ளூர் 405 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 8251 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதை விட அதிகமாக 9110 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
திருவண்ணாமலை, வேலூர், தேனி, ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா சாவுகள்.. இது வரை 2481 பேர் பலி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை