முதல்வர் வேட்பாளர் யார்.. அதிமுகவில் மீண்டும் அணிகள் மோதல்..

Admk C.M. candidate in 2021 assembly election, minister reply.

by எஸ். எம். கணபதி, Aug 10, 2020, 14:12 PM IST

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் தெரியத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார். சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது.


இதன்பின், ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பதவி விலகினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராகத் தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பத்து, பன்னிரெண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர். அவர்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். திடீர் திருப்பமாக சசிகலாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனாலும், சசிகலா தனக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்தார். அதைக் கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர்.

இதற்குப் பின்னர், அரசியல் சூழ்நிலைகள் மாறி, ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி அணியும் இணைந்தன. கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பை எடப்பாடி பழனிசாமியும் ஏற்பதாக முடிவு செய்யப்பட்டது.
கட்சி இரு அணிகளாகப் பிரிந்திருந்த போது, அமைச்சர் ஜெயக்குமார் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது முதல்வர் பதவி காலியாக இல்லை என்றும், ஓ.பி.எஸ்.சுக்கு தனது நிதியமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகவும் கூறியிருந்தார். அதற்கு ஓ.பி.எஸ் ஒரு பொதுக் கூட்டத்தில் பதில் கொடுத்தார். அப்போது அவர், ஜெயலலிதாவே தன்னை 2 முறை முதல்வராக ஆக்கினார். நிதியமைச்சர் பதவியை நீங்க என்ன தருவது? என்று நக்கலாகக் கூறியிருந்தார்.

ஆனால், கால ஓட்டத்தில் ஜெயக்குமார் சொன்னபடி ஓ.பி.எஸ் நிதியமைச்சராகவே பொறுப்பேற்றார். அதே சமயம், பிரதமர் கேட்டுக் கொண்டதால்தான் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.தற்போது அதிமுக ஆட்சிக்காலம் முடியப் போகிறது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியே அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை மறைமுகமாகக் கூறி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வளர்மதி சமீபத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், முதல்வரைப் பாராட்டி கவிதை எழுதியிருந்தார். வளர்மதிக்கே உரியப் பாணியில் ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ளிய வளர்மதி, அதில் காலமெல்லாம் நீயே நிரந்தர முதல்வராகி என்று எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார். அதாவது அவர்தான் அடுத்து ஆட்சிக்கு வந்தாலும் முதல்வர் என்று சொல்லியிருந்தார். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அதிருப்தி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இந்த சூழலில், மதுரை பரவையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். அப்போது, 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தேர்தலுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, முதல்வரைத் தேர்ந்தெடுப்போம். கடந்த காலங்களில் அப்படித்தான் தேர்வு செய்தோம் என்று பதிலளித்தார். அதாவது, மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவார் என்று அவர் சொல்லவில்லை. எனவே, வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யாரென்று சொல்லாமலேயே ஓட்டு கேட்பார்களா? அல்லது அதில் இரு அணிகளுக்கு இடையே உள்ள அதிருப்திகள் பகிரங்கமாக வெளிவருமா என்பது தெரியவில்லை.

You'r reading முதல்வர் வேட்பாளர் யார்.. அதிமுகவில் மீண்டும் அணிகள் மோதல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை