சென்னை மண்டலத்தில் குறையாத கொரோனா.. 2 லட்சம் பேருக்கு பாதிப்பு..

corona cases tally still increasing in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Sep 19, 2020, 09:21 AM IST

சென்னை மற்றும் இதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தினமும் புதிதாக 1500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதே போல், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழக அரசு நேற்று(செப்.17) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5488 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 30,908 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5525 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 75,717 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 67 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8685 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,506 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.



சென்னையில் நேற்று 989 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 151 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 53,616 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 265 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 258 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 31,972 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 29,664 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே தினமும் 1500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் மட்டுமே இது வரை 2 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

கோவையில் 542 பேருக்கும், சேலத்தில் 288 பேருக்கும், திருப்பூரில் 187 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களிலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 83,207 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 61 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading சென்னை மண்டலத்தில் குறையாத கொரோனா.. 2 லட்சம் பேருக்கு பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை