கோவை மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா..

corona new cases still increasing in covai region.

by எஸ். எம். கணபதி, Sep 22, 2020, 09:08 AM IST

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று மட்டும் 648 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு நேற்று (செப்.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5344 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 2 பேர் ஆந்திராவில் இருந்தும் ஒருவர் கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள். மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 47,337 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5492 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 91,974, பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 60 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8877 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று 982 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 153 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 56,625 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 219 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 212 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 32,799 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30,352 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், திருப்பூரில் 161 பேருக்கும், ஈரோட்டில் 201 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 130 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களிலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 78,841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 63 லட்சத்து 55,328 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading கோவை மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை