7 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு.. 22 மாவட்டங்களில் சரிவு..

New corona cases decresing in 22 districts in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Oct 26, 2020, 09:46 AM IST

சென்னை, கோவை, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 22 மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குத்தான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

சில நாட்களுக்கு இந்த எண்ணிக்கை நீடித்து வந்தது. பின்னர், இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதன்பின் தொடர்ந்து 2 வாரங்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 2869 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 9005 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4019 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 67,415 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 31 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,929 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 30,606 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் நேற்று புதிதாக 764 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 155 பேர் காஞ்சிபுரம் 120, திருவள்ளூர் 161, கோவையில் 271, சேலம் 196, திருப்பூர் மாவட்டத்தில் 112 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதிலும், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை உள்பட ஆறேழு மாவட்டங்களில்தான் 50க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிக்கப்பட்டது. 22 மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 95,672 பேருக்கும், செங்கல்பட்டில் 42,655 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37,117 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 95 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 80 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading 7 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு.. 22 மாவட்டங்களில் சரிவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை