சென்னை, கோவை, சேலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு.. சிகிச்சையில் 25 ஆயிரம் பேர்..

by எஸ். எம். கணபதி, Oct 30, 2020, 09:56 AM IST

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்தது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.இதன்பின், தினமும் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று(அக்.29) 2652 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 19,403 பேராக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4087 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 83,464 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 35 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. அதனால், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 756 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 பேர், திருவள்ளூர் 146, கோவையில் 251, ஈரோடு 124, சேலம் மாவட்டத்தில் 170 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 96 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 98,487 பேருக்கும், செங்கல்பட்டில் 43,316 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37,618 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,420 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 98 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading சென்னை, கோவை, சேலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு.. சிகிச்சையில் 25 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை