16 ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? திணறும் தமிழக அரசு

by Balaji, Nov 4, 2020, 20:54 PM IST

வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தினரும் தமிழக அரசு பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்க கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குரானா தொற்று முழுமையாக நீங்காத நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் பள்ளிகள் திறப்பது உசிதமல்ல என்று ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் திட்டமிட்டபடி பள்ளிகளை திறக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. எனவே பெற்றோர்களிடம் கருத்து கேட்பது என முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டங்களில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கொரோனா தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வரும் சூழ்நிலையில், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை விரைவில் திறந்திட கோரிக்கை விடுத்து வந்தனர்.

பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய அரசு, வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாக திறக்க அனுமதித்துள்ளது. எனினும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறந்திடலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணைய வழி வாயிலாகவோ கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும் ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துகொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு பரிசிலிக்கப்பட்டு இருந்த போதிலும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் -ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளை பெற்றிட ஏதுவாக வரும் நவம்பர் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கொரானா முன்னெச்சரிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது . இந்த கருத்து கேட்பு கூட்டங்களில், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

You'r reading 16 ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? திணறும் தமிழக அரசு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை