கோவை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 5, 2020, 10:12 AM IST

கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில் நேற்று மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. தமிழகத்திலும் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இன்னும் பலருக்கு பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

அதன்பின், இது படிப்படியாக குறைந்து, கடந்த அக்.12ம் தேதி 5 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தொடர்ந்து, புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று(நவ.4) 2487 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 34,429 பேராக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2504 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 4031 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 30 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,244 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. அதிலும் கடந்த வாரம் கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.ஆனால், நேற்று(நவ.4) மீண்டும் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைந்தவர்களுக்கே பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 19,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 657 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 157 பேர், திருவள்ளூர் 107, காஞ்சிபுரம் 116, கோவையில் 220, ஈரோடு 110, திருப்பூர் 122, சேலம் மாவட்டத்தில் 103 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து, 2485 பேருக்கும், செங்கல்பட்டில் 44,296 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 38,327 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,907 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading கோவை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை