தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 14 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது..

by எஸ். எம். கணபதி, Nov 19, 2020, 09:16 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14,430 ஆகக் குறைந்தது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. இந்தியாவில் இது வரை 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் சென்றிருக்கிறது.நேற்று(நவ.18) மாநிலம் முழுவதும் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1714 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 63,282 பேராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2311 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 37,289 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 18 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,531 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்குப் புதிதாக 1800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்பு படிப்படியாக நோய் பரவல் குறையத் தொடங்கியது.

நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து வந்து நேற்று 479 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 128 பேர், கோவையில் 162 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் 112 பேர், காஞ்சிபுரம் 93, வேலூர் 71, சேலம் 57 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவான பேருக்குத்தான் நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 10135 பேருக்கும், செங்கல்பட்டில் 46,275 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 39,960 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,932 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 14,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 14 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை