தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்..

by எஸ். எம். கணபதி, Nov 29, 2020, 09:16 AM IST

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. இந்தியாவில் இது வரை 93 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்துள்ளனர். இந்நோய்க்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கு கீழ் சென்றுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று(நவ.28) 66 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1430 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 79,046 பேராக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1453 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 56,279 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 13 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,694 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,073 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். கடந்த ஒரு மாதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று 393 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 14,577 பேருக்கும், செங்கல்பட்டில் 47 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை