கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 10, 2020, 09:04 AM IST

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி பல நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இந்நோய் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கு மேல் பரவியது. தற்போது நோய் பரவல் கட்டுப்பட்டிருக்கிறது. எனினும், சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் கொரேனா பரவல் நீடித்து வருகிறது.

தமிழக அரசு நேற்று(டிச.9) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1232 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 94,020 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1315 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 71,093 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 14 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,836 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,491 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னையில் நேற்று புதிதாக 347 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூரில் 50 பேருக்கும், செங்கல்பட்டில் 78, காஞ்சிபுரத்தில் 48, திருப்பூர் 68, சேலத்தில் 72 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 18,549 பேருக்கும், செங்கல்பட்டில் 48,414 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41,516 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் நேற்று 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் நீடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை