தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் நீடிப்பு.. தினமும் 1200 பேருக்கு பாதிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 12, 2020, 11:49 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் 1200 பேருக்குக் குறையாமல் கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனினும், தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது.

தமிழக அரசு நேற்று(டிச.11) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1235 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 96,475 ஆக உள்ளது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1311 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 74,306 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 17 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,870 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,392 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று புதிதாக 307 பேருக்கும், கோவையில் 115 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூரில் 70 பேருக்கும், செங்கல்பட்டில் 69, திருப்பூர் 48, சேலத்தில் 73 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.

சென்னையில் இது வரை 2 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 48 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் நேற்று 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் நீடிப்பு.. தினமும் 1200 பேருக்கு பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை