தமிழகத்தில் கொரோனா பரவல் குறையவில்லை.. தினமும் ஆயிரம் பேருக்கு பாதிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 14, 2020, 09:12 AM IST

தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்கு மேல் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது.

தமிழக அரசு நேற்று(டிச.13) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1195 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரவல் நீடித்து வருகிறது. அதனால் கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்படவில்லை என்பது தெரிகிறது. நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 98,888 ஆக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1276 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 76,878 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,895 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,115 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று புதிதாக 340 பேருக்கும், கோவையில் 155 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.

சென்னையில் இது வரை 2 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 48 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் நேற்று 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பரவல் குறையவில்லை.. தினமும் ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை