தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சமானது.. சிகிச்சையில் 10 ஆயிரம் பேர்..

by எஸ். எம். கணபதி, Dec 15, 2020, 08:54 AM IST

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 98 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாகப் பரவியிருந்தாலும் தற்போது குறைந்து வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.14) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1141 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரவல் நீடித்து வருகிறது. அதனால் கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்படவில்லை என்பது தெரிகிறது.

நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டியது. 8 லட்சத்து 29 ஆக உயர்ந்தது. கடந்த அக்டோபர் 22ம் தேதி தொற்று பாதிப்பு 7 லட்சத்தை எட்டியிருந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1203 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 78,081 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 14 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,909 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,309 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். இவர்களில் 3153 பேர் சென்னையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 343 பேருக்கும், கோவையில் 124 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் 50, செங்கல்பட்டு 61 பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கூட தொற்று பாதிக்கவில்லை.

சென்னையில் இது வரை 2 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 48 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் நேற்று 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சமானது.. சிகிச்சையில் 10 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை