தேர்தலுக்கு முன்னரே வைரலாகும் மயிலாப்பூர் தொகுதி

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சில நட்சத்திர தொகுதிகளுக்கு வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.அதிமுக சார்பில் மயிலாப்பூருக்காக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் Ex IPS, வைகை செல்வன், முன்னாள் ராஜ்ய சபா எம் பி மைத்ரேயன் மற்றும் தகவல் தொழில்நுட்ப சென்னை மண்டல பொறுப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன் முன்னாள் எம் பி ஜெயவர்தன் போன்றோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் கூட்டணிகளைச் சமன் செய்யக் கணக்குப் போடும் அதிமுக தலைமைக்கு வேறு விதத்தில் மயிலாப்பூர் தொகுதி சார்பாக நெருக்கடி வருகிறது.அதிமுகவின் கூட்டணியில்
இருக்கும் தமாக சென்னையில் ஒரு தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். தமாக தலைவர் வாசன் அவர்களின் தொகுதியாக மயிலாப்பூர் இருப்பதால், அதை அவர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிமுக தலைமையின் கதவுகளைத் தட்டுகிறது.

எதிர் முனையில் பிராமணர்கள் அதிகம் வாழும் தொகுதி என்பதால் திமுக அத்தொகுதிக்காக பெரும் ஆர்வம் காட்டப் போவதில்லை. இருப்பினும் உட்கட்சியில் உறுப்பினர்களைக் குளிர்விக்க திமுகவில் மயிலை வேலு என்பவருடைய பெயர் பரிசீலனையில் உள்ளது. மயிலாப்பூர் தொகுதி வித்தியாசமான மக்கள் பங்கீட்டைக் கொண்ட தொகுதி. அதிகமாக மீனவ மற்றும் பிராமண மக்கள் வசிப்பதால், வழக்கமான சாதிய ஓட்டு ஃபார்முலாக்கள் செல்லுபடியாவது கொஞ்சம் கடினமான விடயம். மீனவர்களோடு நெருக்கம் காட்டும் மயிலை வேலுவின் பெயர் பரிசீலனையில் இருந்தாலும், பெரும்பாலும் பாதுகாப்பான விளையாட்டை ஆட நினைக்கும் திமுக அத்தொகுதியைக் காங்கிரஸ் வசம் ஒப்படைக்கத் தான் அதிகம் நினைக்கும்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் தென்மண்டலங்களில் கோலோச்சுவதைப் போன்ற ஒரு ஆளுமையான அடித்தளம் சென்னையில் இல்லை. அறிவுசார் வேட்பாளர்களை நிறுத்துவதில் முனைப்புக் காட்டும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது மயிலை தொகுதியை யாருக்குக் கொடுப்பது என்ற கேள்வி உள்ளது.சென்னையைப் பொறுத்தமட்டில் பிரபலமான வேட்பாளரை நிறுத்தவே காங்கிரஸ் கட்சி யோசிக்கிறது. அந்த வகையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பிரபலமான பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுடைய பெயர் பரிசீலனையில் உள்ளது.

கோவிட் பெருந்தொற்று நேரத்தில் அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் போடுமாறு பரிந்துரைத்தது போன்ற சில காரணங்களை அந்த கட்சி உற்று நோக்குகிறது. ஒரு வேளை திமுக காங்கிரஸ் வசம் மயிலாப்பூரை ஒப்படைத்தால் ஆனந்த் ஸ்ரீனிவாசனை வேட்பாளராகக் காங்கிரஸ் நிறுத்த வாய்ப்புள்ளது.மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் தொகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிரூபிக்க நினைத்தாலும், அது கமலுக்குச் சாதிய அடையாளத்தைத் தரக்கூடும் என்ற நிபுணர்களின் கருத்தைக் கமல் யோசனையில் வைத்துள்ளார்.

பிஜேபி வழக்கம் போலப் பிராமணர்கள் அதிகம் வாழும் தொகுதி என அதிமுகவிடம் மயிலாப்பூரை தங்களிடம் கொடுக்குமாறு டீலிங் பேசுவார்கள். அவ்வகையில் எஸ்.வி.சேகர், ராகவன், நாராயணன் என ஒரு பெரிய பட்டாளமே போட்டிக்கு இருக்கின்றது.இவ்வாறாக மயிலாப்பூர், சட்டமன்ற தேர்தலுக்கு வெகு முன்னரே ஹாட் ஸ்பாட் ஆக மாறி உள்ளது.

You'r reading தேர்தலுக்கு முன்னரே வைரலாகும் மயிலாப்பூர் தொகுதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை