ஜனவரி 27 இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார்

by Balaji, Dec 17, 2020, 15:38 PM IST

ஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. அவரை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்குப் பாதுகாப்பு வழங்கக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வருமானத்திற்கும் அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்துள்ளதாகத் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா தீர்ப்பு வழங்கினார். இதில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளியாக உறுதி செய்தார். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி, குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 45 மாதங்களாகச் சிறையில் உள்ள இவர்களின் தண்டனை காலம், வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது. அவர்கள், நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகையைச் செலுத்தாமல் இருந்தனர்.சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகைக்கான வங்கி வரைவோலை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம், கடந்த 17ம் தேதி வக்கீல் சி.முத்துகுமார் செலுத்தினார். இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான டிடியை வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் செலுத்தினர்.சசிகலா ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக 48 நாட்கள் சிறையில் இருந்ததை கழிக்க வேண்டும், அவர் சிறையில் இருந்தபோது கன்னட மொழி கற்றுக் கொண்டுள்ளார்.

இதை நன்னடத்தையாகக் கருதி தண்டனை காலம் முடிவதற்கு முன் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத் துறை டிஜிபி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த மாதம் 19ம் தேதி வக்கீல்கள் அசோகன், பி.முத்துக்குமார் ஆகியோர் மனு கொடுத்தனர்.அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி இரவு 9.30 விக்கி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எல்லையான அத்திருப்பள்ளி வரை அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிறைத்துறைக்குக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

You'r reading ஜனவரி 27 இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை