வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை திமுக போராட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 18, 2020, 13:34 PM IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லியில் அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று காலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அடையாள உண்ணாவிரதம் தொடங்கினர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகளுக்கும் - ஒட்டு மொத்த மக்களுக்கும் விரோதமான மூன்று வேளாண் சட்டங்களைக் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி – வற்புறுத்தி டெல்லியில் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு, மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணியின் சார்பில் உண்ணா நோன்பு அறப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

கொரோனா நோய்த் தொற்றில் இந்தியா முழுவதும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றி மத்திய பா.ஜ.க. அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் சிந்தித்துப் பார்க்காமல் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், சுகாதாரப் பணியில் - பொருளாதார உதவியில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாங்கள் போகிற போக்கில் மக்களுக்கு எதிரான சட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம். இந்த நான்கு சட்டங்களும் மக்களுக்கு விரோதமான சட்டங்களாகும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் துணை நிற்கும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே கொந்தளித்துப் போய் இருக்கிறது.

தலைநகர் டெல்லி இன்று கொதித்துப் போய் இருக்கிறது. வட மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளெல்லாம் கும்பல் கும்பலாக - குடும்பம் குடும்பமாகத் தலைநகர் டெல்லியை நோக்கி வருகை தந்து அங்கேயே தங்கி கடுமையான குளிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், அங்கேயே உறங்கி, அங்கேயே சமைத்து உணர்வுபூர்வமான ஒரு போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்; விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அல்லது இதுகுறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதத்தை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், இது எதையும் இந்த மத்திய அரசு செய்திடவில்லை. எதற்காக இவ்வளவு அவசரம்; யாரைப் பாதுகாக்க இந்தச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்? இதை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மத்திய தேசவிரோதிகள் - அந்நியக் கைக்கூலிகள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட முத்திரை குத்தி கொச்சைப்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நாம் என்று இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலமாகக் கண்டித்துக் கொண்டிருக்கிறோம். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஆகவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அவற்றைத் திரும்பப் பெறுகிற வரையில் நம்முடைய போராட்டங்கள் தொடரும்; வேறு கட்டங்களில் அவற்றை முடிவு செய்து அறிவித்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

You'r reading வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை திமுக போராட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை