சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது..

by எஸ். எம். கணபதி, Dec 31, 2020, 09:15 AM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவி வந்த கொரோனா வைரஸ் நோய் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில் ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

தமிழக அரசு நேற்று(டிச.30) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 945 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 17,077 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1060 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 96,353 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 17 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,109 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8615 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.

சென்னை(275பேர்), கோவை(91பேர்) மாவட்டங்களில் மட்டும் நேற்று 50க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 25,252 பேருக்கும், செங்கல்பட்டில் 49,956 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,609 பேருக்கும், கோவையில் 52,247 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில்தான் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். மற்ற மாவட்டங்களில் தினமும் 20, 30 பேருக்குத்தான் தொற்று பரவி வருகிறது.

You'r reading சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை