சென்னையில் புதிய கொரோனா பாதிப்பு 200க்கு கீழ் சரிவு..

by எஸ். எம். கணபதி, Jan 16, 2021, 09:33 AM IST

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பது வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 180 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வேகமாகப் பரவிய கொரோனா தொற்று நோய்ப் பாதிப்பு, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

தற்போது பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.15) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 55 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 621 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 29,573 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 805 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 12,023 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 5 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,254 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6299 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று புதிதாக 180 பேருக்கும், செங்கல்பட்டில் 25 பேருக்கும், திருவள்ளூரில் 22 பேருக்கும், கோவையில் 67 பேருக்கும் சேலத்தில் 24 பேருக்கும் திருப்பூரில் 27 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்துள்ளது.

You'r reading சென்னையில் புதிய கொரோனா பாதிப்பு 200க்கு கீழ் சரிவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை