24 மாவட்டங்களில் கட்டுப்பட்டது கொரோனா பரவல்..

by எஸ். எம். கணபதி, Feb 3, 2021, 10:15 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 7 லட்சத்து 78,208 பேருக்கு பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்கு பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது.

தற்போது தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசு நேற்று(பிப்.2) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 52 ஆயிரம் பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 510 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 39,352 ஆக உயர்ந்தது.
மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 521 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 22,246 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 4 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,367 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 500 ஆக குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் தினமும் புதிதாக 150 பேர் வரையிலும், கோவையில் 80 பேர் வரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். சென்னையில் நேற்று புதிதாக 142 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 54 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 24 பேருக்கும், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 33 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கூட தொற்று பாதிக்கப்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

You'r reading 24 மாவட்டங்களில் கட்டுப்பட்டது கொரோனா பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை